6.95 பொது
தனித்திருத்தாண்டகம்
930அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ, அன்பு உடைய மாமனும்
                                          மாமியும் நீ,
ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ, ஒரு குலமும்
                                சுற்றமும் ஓர் ஊரும் நீ,
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ, துணை ஆய் என்
                               நெஞ்சம் துறப்பிப்பாய் நீ,
இப் பொன் நீ, இம் மணி நீ, இம் முத்து(ந்)நீ, இறைவன் நீ-ஏறு
                                 ஊர்ந்த செல்வன் நீயே.
உரை
   
931வெம்ப வருகிற்பது அன்று, கூற்றம் நம்மேல்; வெய்ய வினைப்
                                 பகையும் பைய நையும்;
எம் பரிவு தீர்ந்தோம்; இடுக்கண் இல்லோம்; எங்கு எழில் என்
                           ஞாயிறு? எளியோம் அல்லோம்
அம் பவளச் செஞ்சடை மேல் ஆறு சூடி, அனல் ஆடி, ஆன்
                                 அஞ்சும் ஆட்டு உகந்த
செம்பவள வண்ணர், செங்குன்ற வண்ணர், செவ்வான வண்ணர்,
                                       என் சிந்தையாரே.
உரை
   
932ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே? அடக்குவித்தால்
                          ஆர் ஒருவர் அடங்காதாரே?
ஓட்டுவித்தால் ஆர் ஒருவர் ஓடாதாரே? உருகுவித்தால்
                            ஆர் ஒருவர் உருகாதாரே?
பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பாடாதாரே? பணிவித்தால் ஆர்
                                 ஒருவர் பணியாதாரே?
காட்டுவித்தால் ஆர் ஒருவர் காணாதாரே? காண்பார் ஆர்,
                         கண்ணுதலாய்! காட்டாக்காலே?.
உரை
   
933நல் பதத்தார் நல் பதமே! ஞானமூர்த்தீ! நலஞ்சுடரே! நால்
                            வேதத்து அப்பால் நின்ற
சொல் பதத்தார் சொல் பதமும் கடந்து நின்ற சொலற்கு
                     அரிய சூழலாய்! இது உன் தன்மை;
நிற்பது ஒத்து நிலை இலா நெஞ்சம் தன்னுள் நிலாவாத
                        புலால் உடம்பே புகுந்து நின்ற
கற்பகமே! யான் உன்னை விடுவேன் அல்லேன்-கனகம்,
                    மா மணி, நிறத்து எம் கடவுளானே!.
உரை
   
934திருக்கோயில் இல்லாத திரு இல் ஊரும், திரு வெண் நீறு
                         அணியாத திரு இல் ஊரும்,
பருக்கு ஓடிப் பத்திமையால் பாடா ஊரும், பாங்கினொடு
                         பல தளிகள் இல்லா ஊரும்,
விருப்போடு வெண் சங்கம் ஊதா ஊரும், விதானமும்
                      வெண்கொடியும் இல்லா ஊரும்,
அருப்போடு மலர் பறித்து இட்டு உண்ணா ஊரும்,
          அவை எல்லாம் ஊர் அல்ல; அடவி- காடே!.
உரை
   
935திருநாமம் அஞ்சு எழுத்தும் செப்பார் ஆகில், தீ வண்ணர்
                       திறம் ஒரு கால் பேசார் ஆகில்,
ஒருகாலும் திருக்கோயில் சூழார் ஆகில், உண்பதன் முன்
                 மலர் பறித்து இட்டு உண்ணார் ஆகில்,
அருநோய்கள் கெட வெண்நீறு அணியார் ஆகில், அளி
                 அற்றார்; பிறந்த ஆறு ஏதோ என்னில்,
பெரு நோய்கள் மிக நலிய, பெயர்த்தும் செத்தும்
            பிறப்பதற்கே தொழில் ஆகி, இறக்கின்றாரே!.
உரை
   
936நின் ஆவார் பிறர் இன்றி நீயே ஆனாய்; நினைப்பார்கள்
                   மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய்;
மன் ஆனாய்; மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய்; மறை
            நான்கும் ஆனாய்; ஆறு அங்கம் ஆனாய்;
பொன் ஆனாய்; மணி ஆனாய்; போகம் ஆனாய்;
             பூமிமேல் புகழ் தக்க பொருளே! உன்னை,
“என் ஆனாய்! என் ஆனாய்!” என்னின் அல்லால்,
              ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே?.
உரை
   
937அத்தா! உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்; அருள்
          நோக்கில்-தீர்த்த நீர் ஆட்டிக் கொண்டாய்;
எத்தனையும் அரியை நீ எளியை ஆனாய்; எனை
        ஆண்டு கொண்டு இரங்கி ஏன்று கொண்டாய்;
பித்தனேன், பேதையேன், பேயேன், நாயேன், பிழைத்
         தனகள் அத்தனையும் பொறுத்தாய் அன்றே!
இத்தனையும் எம் பரமோ? ஐய! ஐயோ! எம்பெருமான்
                      திருக்கருணை இருந்த ஆறே!.
உரை
   
938குலம் பொல்லேன்; குணம் பொல்லேன்; குறியும் பொல்லேன்;
               குற்றமே பெரிது உடையேன்; கோலம் ஆய
நலம் பொல்லேன்; நான் பொல்லேன்; ஞானி அல்லேன்;
                 நல்லாரோடு இசைந்திலேன்; நடுவே நின்ற
விலங்கு அல்லேன்; விலங்கு அல்லாது ஒழிந்தேன் அல்லேன்;
             வெறுப்பனவும் மிகப் பெரிதும் பேச வல்லேன்;
இலம் பொல்லேன்; இரப்பதே ஈய மாட்டேன்; என் செய்வான்
                           தோன்றினேன், ஏழையேனே?.
உரை
   
939சங்க நிதி பதும நிதி இரண்டும் தத்து தரணியொடு
                           வான் ஆளத் தருவரேனும்,
மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்,
                மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லார் ஆகில்
அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயரா(அ)ய்
              ஆ உரித்துத் தின்று உழலும் புலையரேனும்,
கங்கை வார் சடைக் கரந்தார்க்கு அன்பர் ஆகில்,
             அவர் கண்டீர், நாம் வணங்கும் கடவுளாரே!.
உரை