6.99 திருப்புகலூர்
திருத்தாண்டகம்
972எண்ணுகேன்; என் சொல்லி எண்ணுகேனோ,
    எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்?
கண் இலேன்! மற்று ஓர் களை கண் இல்லேன்,
    கழல் அடியே கை தொழுது காணின் அல்லால்;
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்; ஒக்க
            அடைக்கும் போது உணர மாட்டேன்;
புண்ணியா! உன் அடிக்கே போதுகின்றேன் பூம்
                   புகலூர் மேவிய புண்ணியனே!.
உரை
   
973அங்கமே பூண்டாய்! அனல் ஆடி(ன்)னாய்!
 ஆதிரையாய்! ஆல் நிழலாய்! ஆன் ஏறு ஊர்ந்தாய்!
பங்கம் ஒன்று இல்லாத படர் சடையினாய்!
       பாம்பொடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய்!
சங்கை ஒன்று இன்றியே தேவர் வேண்டச்
        சமுத்திரத்தின் நஞ்சு உண்டு, சாவா மூவாச்
சிங்கமே! உன் அடிக்கே போதுகின்றேன்-திருப்
                    புகலூர் மேவிய தேவதேவே!.
உரை
   
974பை அரவக் கச்சையாய்! பால் வெண் நீற்றாய்!
       பளிக்குக் குழையினாய்! பண் ஆர் இன்சொல்
மை விரவு கண்ணாளைப் பாகம் கொண்டாய்!
         மான்மறி கை ஏந்தினாய்! வஞ்சக் கள்வர்-
ஐவரையும் என்மேல்-தரவு அறுத்தாய்; அவர்
        வேண்டும் காரியம் இங்கு ஆவது இல்லை;
பொய் உரையாது உன் அடிக்கே போதுகின்றேன்-
               பூம் புகலூர் மேவிய புண்ணியனே!.
உரை
   
975தெருளாதார் மூ எயிலும் தீயில் வேவ, சிலை
         வளைத்து, செங் கணையால் செற்ற தேவே!
மருளாதார் தம் மனத்தில் வாட்டம் தீர்ப்பாய்! மருந்து
      ஆய்ப் பிணி தீர்ப்பாய், வானோர்க்கு என்றும்!
அருள் ஆகி, ஆதி ஆய், வேதம் ஆகி, அலர்
         மேலான் நீர் மேலான் ஆய்ந்தும் காணாப்
பொருள் ஆவாய்! உன் அடிக்கே போதுகின்றேன்-
                பூம் புகலூர் மேவிய புண்ணியனே!.
உரை
   
976நீர் ஏறு செஞ்சடை மேல் நிலா வெண் திங்கள்
              நீங்காமை வைத்து உகந்த நீதியானே!
பார் ஏறு படுதலையில் பலி கொள்வானே! பண்டு
                 அநங்கற் காய்ந்தானே! பாவநாசா!
கார் ஏறு முகில் அனைய கண்டத்தானே! கருங்கைக்
                  களிற்று உரிவை கதறப் போர்த்த
போர் ஏறே! உன் அடிக்கே போதுகின்றேன்-பூம்
                    புகலூர் மேவிய புண்ணியனே!.
உரை
   
977விரிசடையாய்! வேதியனே! வேத கீதா! விரி பொழில்
              சூழ் வெண் காட்டாய்! மீயச் சூராய்!
திரிபுரங்கள் எரி செய்த தேவதேவே! திரு ஆரூர்த்
                      திரு மூலட்டானம் மேயாய்!
மருவு இனியார் மனத்து உளாய்! மாகாளத்தாய்!
  வலஞ்சுழியாய்! மா மறைக்காட்டு எந்தாய்! என்றும்
புரிசடையாய்! உன் அடிக்கே போதுகின்றேன்-பூம்
                   புகலூர் மேவிய புண்ணியனே!.
உரை
   
978தே ஆர்ந்த தேவனை, தேவர் எல்லாம் திருவடி
                 மேல் அலர் இட்டு, தேடி நின்று,
நா ஆர்ந்த மறை பாடி, நட்டம் ஆடி, நான்முகனும்
                      இந்திரனும் மாலும் போற்ற,
கா ஆர்ந்த பொழில்-சோலைக் கானப்பேராய்!
          கழுக்குன்றத்து உச்சியாய்! கடவுளே! நின்
பூ ஆர்ந்த பொன் அடிக்கே போதுகின்றேன்-பூம்
                    புகலூர் மேவிய புண்ணியனே!.
உரை
   
979நெய் ஆடி! நின்மலனே! நீலகண்டா! நிறைவு
             உடையாய்! மறை வல்லாய்! நீதியானே!
மை ஆடு கண் மடவாள் பாகத்தானே! மான் தோல்
                    உடையாய்! மகிழ்ந்து நின்றாய்!
கொய் ஆடு கூவிளம் கொன்றை மாலை கொண்டு,
                அடியேன் நான் இட்டு, கூறி நின்று
பொய்யாத சேவடிக்கே போதுகின்றேன்-பூம் புகலூர்
                           மேவிய புண்ணியனே!.
உரை
   
980துன்னம் சேர் கோவணத்தாய்! தூய நீற்றாய்! துதைந்து
            இலங்கு வெண் மழுவாள் கையில் ஏந்தி,
தன் அணையும் தண் மதியும் பாம்பும் நீரும் சடை
           முடிமேல் வைத்து உகந்த தன்மையானே!
அன்ன நடை மடவாள் பாகத்தானே! அக்கு ஆரம்
                         பூண்டானே! ஆதியானே!
பொன் அம்கழல் அடிக்கே போதுகின்றேன்-பூம்
                     புகலூர் மேவிய புண்ணியனே!.
உரை
   
981ஒருவரையும் அல்லாது உணராது, உள்ளம்;
               உணர்ச்சித் தடுமாற்றத்துள்ளே நின்ற
இருவரையும் மூவரையும் என்மேல் ஏவி, இல்லாத
              தரவு அறுத்தாய்க்கு இல்லேன்; ஏலக்
கருவரை சூழ் கானல் இலங்கை வேந்தன் கடுந் தேர்
                    மீது ஓடாமைக் காலால் செற்ற
பொரு வரையாய்! உன் அடிக்கே போதுகின்றேன்-பூம்
                     புகலூர் மேவிய புண்ணியனே!.
உரை