7.15 திருநாட்டியத்தான்குடி
தக்கராகம்
1பூண் நாண் ஆவது ஓர் அரவம் கண்டு அஞ்சேன்; புறங்காட்டு ஆடல் கண்டு இகழேன்;
பேணீர் ஆகிலும் பெருமையை உணர்வேன்; பிறவேன் ஆகிலும் மறவேன்;
காணீர் ஆகிலும் காண்பன், என் மனத்தால்; கருதீர் ஆகிலும், கருதி,
நானேல், உம் அடி பாடுதல் ஒழியேன்-நாட்டியத்தான் குடி நம்பீ! .
உரை
   
2கச்சு ஏர் பாம்பு ஒன்று கட்டி நின்று, இடுகாட்டு எல்லியில் ஆடலைக் கவர்வன்;
துச்சேன் என் மனம் புகுந்திருக்கின்றமை சொல்லாய், திப்பிய மூர்த்தீ!
வைச்சே இடர்களைக் களைந்திட வல்ல மணியே! மாணிக்க வண்ணா!
நச்சேன், ஒருவரை, நான் உம்மை அல்லால்; நாட்டியத்தான் குடி நம்பீ! .
உரை
   
3அஞ்சாதே உமக்கு ஆட்செய வல்லேன்; யாதினுக்கு ஆசைப்படுகேன்?
பஞ்சு ஏர் மெல் அடி மாமலை மங்கை பங்கா! எம் பரமேட்டீ!
மஞ்சு ஏர் வெண்மதி செஞ்சடை வைத்த மணியே! மாணிக்கவண்ணா!
நஞ்சு ஏர் கண்டா! வெண்தலை ஏந்தீ! நாட்டியத்தான் குடி நம்பீ! .
உரை
   
4கல்லேன் அல்லேன், நின் புகழ்; அடிமை கல்லாதே பல கற்றேன்;
நில்லேன் அல்லேன், நின் வழி; நின்றார்-தம்முடை நீதியை நினைய
வல்லேன் அல்லேன்; பொன் அடி பரவ-மாட்டேன்; மறுமையை நினைய,
நல்லேன் அல்லேன், நான் உமக்கு அல்லால்; நாட்டியத்தான் குடி நம்பீ! .
உரை
   
5மட்டு ஆர் பூங்குழல் மலைமகள் கணவனைக் கருதார் தமைக் கருதேன்;
ஒட்டீர் ஆகிலும் ஒட்டுவன், அடியேன்; உம் அடி அடைந்தவர்க்கு அடிமைப்
பட்டேன் ஆகிலும் பாடுதல் ஒழியேன்; பாடியும் நாடியும் அறிய
நட்டேன் ஆதலால் நான் மறக்கில்லேன்-நாட்டியத்தான் குடி நம்பீ! .
உரை
   
6படப் பால்-தன்மையின், நான் பட்டது எல்லாம் “படுத்தாய்” என்று அல்லல் பறையேன்;
குடப் பாச்சில்(ல்) உறை கோ! குளிர் வானே! கோனே! கூற்று உதைத்தானே!
மடப் பால்-தயிரொடு நெய் மகிழ்ந்து ஆடும் மறை ஓதீ! மங்கை பங்கா!
நடப்பீர் ஆகிலும் நடப்பன், உம் அடிக்கே; நாட்டியத்தான் குடி நம்பீ! .
உரை
   
7ஐவாய் அரவினை மதி உடன் வைத்த அழகா! அமரர்கள் தலைவா!
எய்வான் வைத்தது ஓர் இலக்கினை அணை தர நினைந்தேன், உள்ளம் உள்ளளவும்;
உய்வான் எண்ணி வந்து உம் அடி அடைந்தேன்; உகவீர் ஆகிலும் உகப்பன்;
நைவான் அன்று, உமக்கு ஆட்பட்டது, அடியேன்; நாட்டியத்தான் குடி நம்பீ! .
உரை
   
8கலியேன், மானுட வாழ்க்கை ஒன்று ஆக; கருதிடின் கண்கள் நீர் பில்கும்;
பலி தேர்ந்து உண்பது ஓர் பண்பு கண்டு இகழேன்; பசுவே ஏறிலும் பழியேன்;
வலியே ஆகிலும் வணங்குதல் ஒழியேன்; மாட்டேன்; மறுமையை நினையேன்;
நலியேன் ஒருவரை, நான் உமை அல்லால்; நாட்டியத்தான் குடி நம்பீ! .
உரை
   
9குண்டாடிச் சமண் சாக்கியப் பேய்கள் கொண்டார் ஆகிலும், கொள்ளக்
கண்டாலும், கருதேன்; எருது ஏறும் கண்ணா! நின் அலது அறியேன்;
தொண்டாடித் தொழுவார் தொழக் கண்டு தொழுதேன், என் வினை போக;
நண்டு ஆடும் வயல்-தண்டலை வேலி நாட்டியத்தான் குடி நம்பீ! .
உரை
   
10கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற கொடிறன், கோட்புலி, சென்னி
நாடு ஆர் தொல்புகழ் நாட்டியத்தான் குடி நம்பியை நாளும் மறவா,
சேடு ஆர் பூங்குழல் சிங்கடி அப்பன்-திரு ஆரூரன்-உரைத்த,
பாடீர் ஆகிலும், பாடுமின், தொண்டீர்! பாட, நும் பாவம் பற்று அறுமே .
உரை