7.24 திருமழபாடி
நட்டராகம்
1பொன் ஆர் மேனியனே! புலித்தோலை அரைக்கு அசைத்து,
மின் ஆர் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே!
மன்னே! மாமணியே! மழபாடியுள் மாணிக்கமே!
அன்னே! உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? .
உரை
   
2கீள் ஆர் கோவணமும், திருநீறு மெய் பூசி, உன்தன்
தாளே வந்து அடைந்தேன்; தலைவா! எனை ஏன்றுகொள், நீ!
வாள் ஆர் கண்ணி பங்கா! மழபாடியுள் மாணிக்கமே!
கேளா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? .
உரை
   
3எம்மான், எம் அ(ன்)னை, என் தனக்கு எள்-தனைச் சார்வு ஆகார்;
இம் மாயப் பிறவி பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்;
மைம் மாம் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே!
அம்மான்! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? .
உரை
   
4பண்டே நின் அடியேன்; அடியார் அடியார்கட்கு எல்லாம்
தொண்டே பூண்டொழிந்தேன்; தொடராமைத் துரிசு அறுத்தேன்;
வண்டு ஆர் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே!
அண்டா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? .
உரை
   
5கண் ஆய், ஏழ் உலகும் கருத்து ஆய அருத்தமும் ஆய்,
பண் ஆர் இன் தமிழ் ஆய், பரம் ஆய பரஞ்சுடரே!
மண் ஆர் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே!
அண்ணா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? .
உரை
   
6நாளார் வந்து அணுகி நலியாமுனம், நின் தனக்கே
ஆளா வந்து அடைந்தேன்; அடியேனையும் ஏன்றுகொள், நீ!
மாளா நாள் அருளும் மழபாடியுள் மாணிக்கமே!
ஆளா!—நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? .
உரை
   
7சந்து ஆரும் குழையாய்! சடைமேல் பிறைதாங்கி! நல்ல
வெந்தார் வெண்பொடியாய்! விடை ஏறிய வித்தகனே!
மைந்து ஆர் சோலைகள் சூழ் மழபாடியுள் மாணிக்கமே!
எந்தாய்!—நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? .
உரை
   
8வெய்ய விரிசுடரோன் மிகு தேவர் கணங்கள் எல்லாம்
செய்ய மலர்கள் இட, மிகு செம்மையுள் நின்றவனே!
மை ஆர் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே!
ஐயா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? .
உரை
   
9நெறியே! நின்மலனே! நெடுமால் அயன் போற்றி செய்யும்
குறியே! நீர்மையனே! கொடி ஏர் இடையாள் தலைவா!
மறி சேர் அம் கையனே! மழபாடியுள் மாணிக்கமே!
அறிவே! உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? .
உரை
   
10ஏர் ஆர் முப்புரமும் எரியச் சிலை தொட்டவனை,
வார் ஆர் கொங்கை உடன் மழபாடியுள் மேயவனை,
சீர் ஆர் நாவலர் கோன்-ஆரூரன்-உரைத்த தமிழ்
பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே .
உரை