7.32 திருக்கோடிக் குழகர்
கொல்லி
1கடிது ஆய்க் கடல் காற்று வந்து எற்ற, கரைமேல்
குடி தான் அயலே இருந்தால் குற்றம் ஆமோ?
கொடியேன் கண்கள் கண்டன, கோடிக் குழகீர்!
அடிகேள்! உமக்கு ஆர் துணை ஆக இருந்தீரே?
உரை
   
2முன் தான் கடல் நஞ்சம் உண்ட அதனாலோ?
பின் தான் பரவைக்கு உபகாரம் செய்தாயோ?
குன்றாப் பொழில் சூழ் தரு கோடிக் குழகா!
என் தான் தனியே இருந்தாய்? எம்பிரானே!
உரை
   
3மத்தம் மலி சூழ் மறைக்காடு அதன் தென்பால்
பத்தர் பலர் பாட இருந்த பரமா!
கொத்து ஆர் பொழில் சூழ்தரு கோடிக் குழகா!
எத்தால்-தனியே இருந்தாய்? எம்பிரானே!
உரை
   
4காடேல், மிக வலிது; காரிகை அஞ்ச,
கூடிப் பொந்தில் ஆந்தைகள் கூகை குழற,
வேடித் தொண்டர் சாலவும் தீயர்; சழக்கர்;
கோடிக் குழகா! இடம் கோயில் கொண்டாயே?
உரை
   
5மை ஆர் தடங்கண்ணி பங்கா! கங்கையாளும்
மெய் ஆகத்து இருந்தனள்; வேறு இடம் இல்லை;
கை ஆர் வளைக் காடு காளோடும் உடன் ஆய்க்
கொய் ஆர் பொழில் கோடியே கோயில் கொண்டாயே?
உரை
   
6அரவு ஏர் அல்குலாளை ஓர் பாகம் அமர்ந்து,
மரவம் கமழ் மா மறைக்காடு அதன் தென்பால்
குரவம் பொழில் சூழ்தரு கோடிக் குழகா!
இரவே துணை ஆய் இருந்தாய்; எம்பிரானே!
உரை
   
7பறையும் குழலும்(ம்) ஒலிபாடல் இயம்ப,
அறையும் கழல் ஆர்க்க, நின்று ஆடும் அமுதே!
குறையாப் பொழில் சூழ்தரு கோடிக் குழகா!
இறைவா! தனியே இருந்தாய்; எம்பிரானே!
உரை
   
8ஒற்றியூர் என்ற ஊனத்தினால் அது தானோ?
அற்றப் பட ஆரூர் அது என்று அகன்றாயோ?
முற்றா மதி சூடிய கோடிக் குழகா!
எற்றால்-தனியே இருந்தாய்? எம்பிரானே!
உரை
   
9நெடியானொடு நான்முகனும்(ம்) அறிவு ஒண்ணாப்
படியான்! பலி கொள்ளும் இடம் குடி இல்லை;
கொடியார் பலர் வேடர்கள் வாழும் கரைமேல்;
அடிகேள்! அன்பு அது ஆய் இடம் கோயில் கொண்டாயே!
உரை
   
10பார் ஊர் மலி சூழ் மறைக்காடு அதன் தென்பால்
ஏர் ஆர் பொழில் சூழ்தரு கோடிக் குழகை
ஆரூரன் உரைத்தன பத்து இவை வல்லார்
சீர் ஊர் சிவலோகத்து இருப்பவர் தாமே.
உரை