7.37 திருஆரூர்
கொல்லி
1குருகு பாய, கொழுங் கரும்புகள் நெரிந்த சாறு
அருகு பாயும் வயல் அம் தண் ஆரூரரைப்
பருகும் ஆறும், பணிந்து ஏத்தும் ஆறும், நினைந்து
உருகும் ஆறும்(ம்), இவை உணர்த்த வல்லீர்களே? .
உரை
   
2பறக்கும் எம் கிள்ளைகாள்! பாடும் எம் பூவைகாள்!
அறக்கண் என்னத் தகும் அடிகள் ஆரூரரை
மறக்ககில்லாமையும், வளைகள் நில்லாமையும்,
உறக்கம் இல்லாமையும், உணர்த்த வல்லீர்களே? .
உரை
   
3சூழும் ஓடிச் சுழன்று உழலும் வெண் நாரைகாள்!
ஆளும் அம் பொன்கழல் அடிகள் ஆரூரர்க்கு
வாழும் ஆறும், வளை கழலும் ஆறும்(ம்), எனக்கு
ஊழும் மாறும்(ம்), இவை உணர்த்த வல்லீர்களே? .
உரை
   
4சக்கிரவாளத்து இளம் பேடைகாள்! சேவல்காள்!
அக்கிரமங்கள் செயும் அடிகள் ஆரூரர்க்கு,
வக்கிரம் இல்லாமையும், வளைகள் நில்லாமையும்,
உக்கிரம் இல்லாமையும், உணர்த்த வல்லீர்களே? .
உரை
   
5இலை கொள் சோலைத்தலை இருக்கும் வெண் நாரைகாள்!
அலை கொள் சூலப்படை அடிகள் ஆரூரர்க்கு,
கலைகள் சோர்கின்றதும், கன வளை கழன்றதும்,
முலைகள் பீர் கொண்டதும், மொழிய வல்லீர்களே? .
உரை
   
6வண்டுகாள்! கொண்டல்காள்! வார் மணல் குருகுகாள்!
அண்டவாணர் தொழும் அடிகள் ஆரூரரைக்
கண்ட ஆறும், காமத்தீக் கனன்று எரிந்து மெய்
உண்ட ஆறும்(ம்), இவை உணர்த்த வல்லீர்களே? .
உரை
   
7தேன் நலம் கொண்ட தேன்! வண்டுகாள்! கொண்டல்காள்!
ஆன் நலம் கொண்ட எம் அடிகள் ஆரூரர்க்கு,
பால் நலம் கொண்ட எம் பணை முலை பயந்து பொன்
ஊன் நலம் கொண்டதும் உணர்த்த வல்லீர்களே? .
உரை
   
8சுற்று முற்றும் சுழன்று உழலும் வெண் நாரைகாள்!
அற்றம் முற்றப் பகர்ந்து அடிகள் ஆரூரர்க்கு,
பற்று மற்று இன்மையும், பாடு மற்று இன்மையும்,
முற்றும் மற்று இன்மையும், மொழிய வல்லீர்களே? .
உரை
   
9குரவம் நாற, குயில் வண்டு இனம் பாட, நின்று
அரவம் ஆடும் பொழில் அம் தண் ஆரூரரைப்
பரவி நாடு(ம்)மதும், பாடி நாடு(ம்)மதும்,
உருகி நாடு(ம்)மதும், உணர்த்த வல்லீர்களே? .
உரை
   
10கூடும் அன்னப் பெடைகாள்! குயில்! வண்டுகாள்!
ஆடும் அம் பொன்கழல் அடிகள் ஆரூரரைப்
பாடும் ஆறும், பணிந்து ஏத்தும் ஆறும், கூடி
ஊடும் ஆறும்(ம்), இவை உணர்த்த வல்லீர்களே? .
உரை
   
11நித்தம் ஆக(ந்) நினைந்து உள்ளம் ஏத்தித் தொழும்
அத்தன், அம் பொன்கழல் அடிகள், ஆரூரரைச்
சித்தம் வைத்த புகழ்ச் சிங்கடி அப்பன்-மெய்ப்-
பத்தன், ஊரன்-சொன்ன பாடுமின், பத்தரே! .
உரை