7.43 திருமுதுகுன்றம்
கொல்லிக்கௌவாணம்
1நஞ்சி, “இடை இன்று நாளை” என்று உம்மை நச்சுவார்
துஞ்சியிட்டால் பின்னைச் செய்வது என்? அடிகேள், சொலீர்!
பஞ்சி இடப் புட்டில் கீறுமோ? பணியீர், அருள்!
முஞ்சி இடைச் சங்கம் ஆர்க்கும் சீர் முதுகுன்றரே!
உரை
   
2ஏரிக் கனகக்கமலம் மலர் அன்ன சேவடி
ஊர் இத்தனையும் திரிந்தக்கால் அவை நோம்கொலோ?
வாரிக்கண் சென்று வளைக்கப்பட்டு, வருந்திப் போய்,
மூரிக் களிறு முழக்கு அறா முதுகுன்றரே!
உரை
   
3தொண்டர்கள் பாட, விண்ணோர்கள் ஏத்த உழிதர்வீர்!
பண்டு அகம் தோறும் பலிக்குச் செல்வது பான்மையே?
கண்டகர் வாளிகள் வில்லிகள் புறங்காக்கும் சீர்
மொண்ட கை வேள்வி முழக்கு அறா முதுகுன்றரே!
உரை
   
4இளைப்பு அறியீர்; இம்மை ஏத்துவார்க்கு அம்மை செய்வது என்?
விளைப்பு அறியாத வெங் காலனை உயிர் வீட்டினீர்;
அளைப் பிரியா அரவு அல்குலாளொடு கங்கை சேர்
முளைப்பிறைச் சென்னிச் சடைமுடி முதுகுன்றரே!
உரை
   
5ஆடி அசைந்து அடியாரும் நீரும் அகம் தொறும்
பாடிப் படைத்த பொருள் எலாம் உமையாளுக்கோ?
மாடம், மதில், அணி கோபுரம், மணி மண்டபம்,
மூடி முகில் தவழ் சோலை சூழ் முதுகுன்றரே!
உரை
   
6இழை வளர் நுண் இடை மங்கையொடு இடுகாட்டு இடைக்
குழை வளர் காதுகள் மோத நின்று குனிப்பதே?
மழை வளரும் நெடுங்கோட்டு இடை மதயானைகள்,
முழை வளர் ஆளி, முழக்கு அறா முதுகுன்றரே!
உரை
   
7சென்று இல் இடைச் செடி நாய் குரைக்க, செடிச்சிகள்
மன்றில் இடைப் பலி தேரப் போவது வாழ்க்கையே?
குன்றில் இடைக் களிறு ஆளி கொள்ள, குறத்திகள்
முன்றில் இடைப் பிடி கன்று இடும் முதுகுன்றரே!
உரை
   
8அந்தி திரிந்து அடியாரும் நீரும் அகம்தொறும்
சந்திகள் தோறும் பலிக்குச் செல்வது தக்கதே?
மந்தி கடுவனுக்கு உண் பழம் நாடி மலைப்புறம்
முந்தி அடி தொழ நின்ற சீர் முதுகுன்றரே!
உரை
   
9செட்டு நின் காதலி ஊர்கள் தோறும் அறம் செய,
“அட்டுமின், சில்பலிக்கு!” என்று அகம் கடை நிற்பதே?
பட்டி வெள் ஏறு உகந்து ஏறுவீர்! பரிசு என்கொலோ?
முட்டி அடி தொழ நின்ற சீர் முதுகுன்றரே!
உரை
   
10எத்திசையும் திரிந்து ஏற்றக்கால் பிறர் என் சொலார்?
பத்தியினால் இடுவார் இடைப் பலி கொண்மினோ!
எத்திசையும் திரை ஏற மோதிக் கரைகள் மேல்
முத்தி முத்தாறு வலம் செயும் முதுகுன்றரே!
உரை
   
11முத்தி முத்தாறு வலம் செயும் முதுகுன்றரைப்
பித்தன் ஒப்பான் அடித்தொண்டன்-ஊரன்-பிதற்று இவை
தத்துவ ஞானிகள் ஆயினார் தடுமாற்று இலார்,
எத்தவத்தோர்களும், ஏத்துவார்க்கு இடர் இல்லையே.
உரை