7.44 பொது: “முடிப்பது கங்கை”
கொல்லிக்கௌவாணம்
1முடிப்பது கங்கையும், திங்களும்; செற்றது மூ எயில்;
நொடிப்பது மாத்திரை நீறு எழக் கணை நூறினார்;
“கடிப்பதும் ஏறும்” என்று அஞ்சுவன்; திருக்கைகளால்
பிடிப்பது பாம்பு அன்றி இல்லையோ, எம்பிரானுக்கே?
உரை
   
2தூறு அன்றி ஆடு அரங்கு இல்லையோ? சுடலைப் பொடி-
நீறு அன்றிச் சாந்தம் மற்று இல்லையோ? இமவான் மகள்
கூறு அன்றிக் கூறு மற்று இல்லையோ? கொல்லைச் சில்லை வெள்-
ஏறு அன்றி ஏறுவது இல்லையோ, எம்பிரானுக்கே?
உரை
   
3தட்டு எனும் தட்டு எனும், தொண்டர்காள்! தடுமாற்றத்தை,
ஒட்டு எனும் ஒட்டு எனும் மா நிலத்து உயிர் கோறலை;
சிட்டனும், திரிபுரம் சுட்ட தேவர்கள் தேவனை,
வெட்டெனப் பேசன்மின், தொண்டர்காள், எம்பிரானையே!
உரை
   
4நரி தலை கவ்வ, நின்று ஓரி கூப்பிட, நள் இருள்
எரி தலைப் பேய் புடை சூழ, ஆர் இருள் காட்டு இடைச்
சிரி தலை மாலை சடைக்கு அணிந்த எம் செல்வனை,
பிரிதலைப் பேசன்மின், தொண்டர்காள், எம்பிரானையே!
உரை
   
5வேய் அன தோளி மலை மகளை விரும்பிய
மாயம் இல் மாமலை நாடன் ஆகிய மாண்பனை,
ஆயன சொல்லி நின்றார்கள் அல்லல் அறுக்கிலும்,
“பேயனே! பித்தனே!” என்பரால், எம்பிரானையே!
உரை
   
6“இறைவன்!” என்று எம்பெருமானை வானவர் ஏத்தப் போய்,
துறை ஒன்றி, தூ மலர் இட்டு, அடி இணை போற்றுவார்;
மறை அன்றிப் பாடுவது இல்லையோ? மல்கு வான் இளம்-
பிறை அன்றிச் சூடுவது இல்லையோ, எம்பிரானுக்கே?
உரை
   
7தாரும், தண் கொன்றையும் கூவிளம் தனி மத்தமும்;
ஆரும் அளவு, அறியாத ஆதியும் அந்தமும்;
ஊரும், ஒன்று இல்லை, உலகு எலாம், உகப்பார் தொழப்
பேரும் ஓர் ஆயிரம் என்பரால், எம்பிரானுக்கே.
உரை
   
8அரியொடு பூமிசையானும் ஆதியும் அறிகிலார்;
வரி தரு பாம்பொடு வன்னி திங்களும் மத்தமும்
புரி தரு புன்சடை வைத்த எம் புனிதற்கு, இனி
எரி அன்றி அங்கைக்கு ஒன்று இல்லையோ, எம்பிரானுக்கே?
உரை
   
9கரிய மனச் சமண் காடி ஆடு கழுக்களால்
எரிய வசவுணும் தன்மையோ? இமவான் மகள்
பெரிய மனம் தடுமாற வேண்டி, பெம்மான்-மதக்-
கரியின் உரி அல்லது இல்லையோ, எம்பிரானுக்கே?
உரை
   
10காய்சின மால்விடை மாணிக்கத்து, எம் கறைக் கண்டத்து,
ஈசனை ஊரன் எட்டோடு இரண்டு விரும்பிய
ஆயின சீர்ப் பகை ஞானி அப்பன், அடித்தொண்டன் தான்,
ஏசின பேசுமின், தொண்டர் காள், எம்பிரானையே!
உரை