7.50 திருப்புனவாயில்
பழம்பஞ்சுரம்
1சித்தம்! நீ நினை! என்னொடு சூள் அறு, வைகலும்!
மத்தயானையின் ஈர் உரி போர்த்த மணாளன் ஊர்
பத்தர் தாம் பலர் பாடி நின்று ஆடும் பழம் பதி,
பொத்தில் ஆந்தைகள் பாட்டு அறா புனவாயிலே.
உரை
   
2கருது நீ, மனம்! என்னொடு சூள் அறு, வைகலும்!
எருது மேற்கொளும் எம்பெருமாற்கு இடம் ஆவது
மருத வானவர் வைகும் இடம், மற வேடுவர்
பொருது, சாத்தொடு, பூசல் அறா புனவாயிலே.
உரை
   
3தொக்கு ஆய மனம்! என்னொடு சூள் அறு, வைகலும்!
நக்கான், நமை ஆள் உடையான், நவிலும்(ம்) இடம்
அக்கோடு அரவு ஆர்த்த பிரான் அடிக்கு அன்பராய்ப்
புக்கார் அவர் போற்று ஒழியா புனவாயிலே.
உரை
   
4வற்கென்று இருத்தி கண்டாய், மனம்! என்னொடு சூள் அறு, வைகலும்!
பொன் குன்றம் சேர்ந்தது ஓர் காக்கை பொன் ஆம்; அதுவே புகல்
கல்குன்றும், தூறும், கடு வெளியும், கடல் கானல் வாய்ப்
புற்கென்று தோன்றிடும் எம் பெருமான் புனவாயிலே.
உரை
   
5நில்லாய், மனம்! என்னொடு சூள் அறு, வைகலும்!
நல்லான் நமை ஆள் உடையான் நவிலும்(ம்) இடம்
வில் வாய்க் கணை வேட்டுவர் ஆட்ட, வெகுண்டு போய்ப்
புல் வாய்க் கணம் புக்கு ஒளிக்கும் புனவாயிலே.
உரை
   
6மறவல் நீ, மனம்! என்னொடு சூள் அறு, வைகலும்!
உறவும் ஊழியும் ஆய பெம்மாற்கு இடம் ஆவது
பிறவு கள்ளியின் நீள் கவட்டு ஏறித் தன் பேடையைப்
புறவம் கூப்பிடப் பொன் புனம் சூழ் புனவாயிலே.
உரை
   
7ஏசு அற்று நீ நினை, என்னொடு சூள் அறு, வைகலும்!
பாசு அற்றவர் பாடி நின்று ஆடும் பழம் பதி
தேசத்து அடியவர் வந்து இருபோதும் வணங்கிடப்
பூசல்-துடி பூசல் அறா புனவாயிலே.
உரை
   
8கொள்ளி வாயின கூர் எயிற்று ஏனம் கிழிக்கவே
தெள்ளி மா மணி தீவிழிக்கும்(ம்) இடம் செந் தறை
கள்ளி வற்றி, புல் தீந்து, வெங் கானம் கழிக்கவே,
புள்ளி மான் இனம் புக்கு ஒளிக்கும் புனவாயிலே.
உரை
   
9எற்றே, நினை! என்னொடும் சூள் அறு, வைகலும்!
மற்று ஏதும் வேண்டா, வல்வினை ஆயின மாய்ந்து அற;
கல்-தூறு கார்க் காட்டு இடை மேய்ந்த கார்க்கோழி போயப்
புற்று ஏறி, “கூ கூ” என அழைக்கும் புனவாயிலே.
உரை
   
10பொடி ஆடு மேனியன் பொன் புனம் சூழ் புனவாயிலை
அடியார் அடியன்-நாவல் ஊரன்-உரைத்தன
மடியாது கற்று இவை ஏத்த வல்லார், வினை மாய்ந்து போய்க்
குடி ஆக, பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை, குற்றமே.
உரை