7.73 திருஆரூர்
காந்தாரம்
1கரையும், கடலும், மலையும், காலையும், மாலையும், எல்லாம்
உரையில் விரவி வருவான்; ஒருவன்; உருத்திரலோகன்;
வரையின் மடமகள் கேள்வன்; வானவர் தானவர்க்கு எல்லாம்
அரையன்; இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்!
உரை
   
2“தனியன்” என்று எள்கி அறியேன்; தம்மைப் பெரிதும் உகப்பன்;
முனிபவர் தம்மை முனிவன்; முகம் பல பேசி மொழியேன்;
கனிகள் பல உடைச் சோலைக் காய்க்குலை ஈன்ற கமுகின்
இனியன் இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்!
உரை
   
3சொல்லில் குலா அன்றிச் சொல்லேன்; தொடர்ந்தவர்க்கும் துணை அல்லேன்;
கல்லில் வலிய மனத்தேன்; கற்ற பெரும் புலவாணர்
அல்லல் பெரிதும் அறுப்பான், அருமறை ஆறு அங்கம் ஓதும்
எல்லை, இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்!
உரை
   
4நெறியும், அறிவும், செறிவும், நீதியும், நான் மிகப் பொல்லேன்;
மிறையும் தறியும் உகப்பன்; வேண்டிற்றுச் செய்து திரிவேன்;
பிறையும் அரவும் புனலும் பிறங்கிய செஞ்சடை வைத்த
இறைவன் இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்!
உரை
   
5நீதியில் ஒன்றும் வழுவேன்; நிட்கண்டகம் செய்து வாழ்வேன்;
வேதியர் தம்மை வெகுளேன்; வெகுண்டவர்க்கும் துணை ஆகேன்;
சோதியில் சோதி எம்மானை, சுண்ண வெண் நீறு அணிந்திட்ட
ஆதி, இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்!
உரை
   
6அருத்தம் பெரிதும் உகப்பேன்; அலவலையேன்; அலந்தார்கள்
ஒருத்தர்க்கு உதவியேன் அல்லேன்; உற்றவர்க்குத் துணை அல்லேன்;
பொருத்த மேல் ஒன்றும் இலாதேன்; புற்று எடுத்திட்டு இடம் கொண்ட
அருத்தன் இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்!
உரை
   
7சந்தம் பல அறுக்கில்லேன்; சார்ந்தவர் தம் அடிச் சாரேன்;
முந்திப் பொரு விடை ஏறி மூ உலகும் திரிவானே,
கந்தம் கமழ் கொன்றை மாலைக் கண்ணியன், விண்ணவர் ஏத்தும்
எந்தை, இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்!
உரை
   
8நெண்டிக் கொண்டேயும் கிலாய்ப்பன்; நிச்சயமே; இது திண்ணம்;
மிண்டர்க்கு மிண்டு அலால் பேசேன்; மெய்ப்பொருள் அன்றி உணரேன்;
பண்டு அங்கு இலங்கையர் கோனைப் பருவரைக் கீழ் அடர்த்திட்ட
அண்டன் இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்!
உரை
   
9நமர், பிறர், என்பது அறியேன்; நான் கண்டதே கண்டு வாழ்வேன்;
தமரம் பெரிதும் உகப்பன்; தக்க ஆறு ஒன்றும் இலாதேன்;
குமரன், திருமால், பிரமன் கூடிய தேவர் வணங்கும்
அமரன் இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்!
உரை
   
10ஆசை பல அறுக்கில்லேன்; ஆரையும் அன்றி உரைப்பேன்;
பேசில் சழக்கு அலால் பேசேன்; பிழைப்பு உடையேன், மனம் தன்னால்;
ஓசை பெரிதும் உகப்பேன்; ஒலி கடல் நஞ்சு அமுது உண்ட
ஈசன் இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்!
உரை
   
11“எந்தை இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? என்று
சிந்தை செயும் திறம் வல்லான், திரு மருவும் திரள் தோளான்,
மந்த முழவம் இயம்பும் வளவயல் நாவல் ஆரூரன்
சந்தம் இசையொடும் வல்லார் தாம் புகழ் எய்துவர் தாமே.
உரை