7.91 திருஒற்றியூர்
குறிஞ்சி
1பாட்டும் பாடிப் பரவித் திரிவார்
ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில்-
காட்டும் கலமும் திமிலும் கரைக்கே
ஓட்டும் திரைவாய் ஒற்றியூரே.
உரை
   
2பந்தும் கிளியும் பயிலும் பாவை
சிந்தை கவர்வார், செந்தீவண்ணர்,
எம்தம் அடிகள், இறைவர்க்கு இடம்போல்-
உந்தும் திரைவாய் ஒற்றியூரே.
உரை
   
3பவளக் கனிவாய்ப் பாவை பங்கன்,
கவளக் களிற்றின் உரிவை போர்த்தான்,
தவழும் மதி சேர் சடையாற்கு, இடம்போல்-
உகளும் திரைவாய் ஒற்றியூரே.
உரை
   
4என்(ன்)னது எழிலும் நிறையும் கவர்வான்,-
புன்னை மலரும் புறவில்-திகழும்-
தன்னை முன்னம் நினைக்கத் தருவான்,
உன்னப்படுவான், -ஒற்றியூரே
உரை
   
5பணம் கொள் அரவம் பற்றி, பரமன்,
கணங்கள் சூழக் கபாலம் ஏந்தி,
வணங்கும் இடை மென்மடவார் இட்ட
உணங்கல் கவர்வான்,-ஒற்றியூரே.
உரை
   
6படை ஆர் மழுவன், பலவெண் நீற்றன்,
விடை ஆர் கொடியன், வேத நாவன்,
அடைவார் வினைகள் அறுப்பான், என்னை
உடையான், உறையும்-ஒற்றியூரே.
உரை
   
7சென்ற புரங்கள் தீயில் வேவ
வென்ற விகிர்தன், வினையை வீட்ட
நன்றும் நல்ல நாதன், நரை ஏறு
ஒன்றை உடையான்,-ஒற்றியூரே.
உரை
   
8கலவ மயில் போல் வளைக்கை நல்லார்
பலரும் பரவும் பவளப்படியான்,
உலகின் உள்ளார் வினைகள் தீர்ப்பான்,-
உலவும் திரைவாய் ஒற்றியூரே.
உரை
   
9பற்றி வரையை எடுத்த அரக்கன்
இற்று முரிய விரலால் அடர்த்தார்;
எற்றும் வினைகள் தீர்ப்பார்;-ஓதம்
ஒற்றும் திரைவாய் ஒற்றியூரே.
உரை
   
10ஒற்றி ஊரும் அரவும் பிறையும்
பற்றி ஊரும் பவளச் சடையான்
ஒற்றியூர் மேல் ஊரன் உரைத்த
கற்றுப் பாட, கழியும், வினையே.
உரை