7.94 திருச் சோற்றுத்துறை
கௌசிகம்
1அழல் நீர் ஒழுகியனைய சடையும்,
உழை ஈர் உரியும், உடையான் இடம் ஆம்-
கழை நீர் முத்தும் ககைக்குவையும்
சுழல் நீர்ப் பொன்னி-சோற்றுத்துறையே.
உரை
   
2பண்டை வினைகள் பறிய நின்ற
அண்ட முதல்வன், அமலன், இடம் ஆம்-
இண்டை கொண்டு அன்பு இடை அறாத
தொண்டர் பரவும்-சோற்றுத்துறையே.
உரை
   
3கோல அரவும், கொக்கின் இறகும்,
மாலை மதியும், வைத்தான் இடம் ஆம்-
ஆலும் மயிலும், ஆடல் அளியும்,
சோலை தரு நீர்-சோற்றுத்துறையே.
உரை
   
4பளிக்குத்தாரை பவளவெற்பில்
குளிக்கும் போல் நூல் கோமாற்கு இடம் ஆம்-
அளிக்கும் ஆர்த்தி, அல்லால் மதுவும்
துளிக்கும் சோலை-சோற்றுத்துறையே.
உரை
   
5உதையும், கூற்றுக்கு; ஒல்கா விதிக்கு
வதையும்; செய்த மைந்தன் இடம் ஆம்-
திதையும் தாதும் தேனும் ஞிமிறும்
துதையும் பொன்னி-சோற்றுத்துறையே.
உரை
   
6ஓதக்கடல் நஞ்சினை உண்டிட்ட
பேதைப்பெருமான் பேணும் பதி ஆம்-
சீதப்புனல் உண்டு எரியைக் காலும்
சூதப்பொழில் சூழ்-சோற்றுத்துறையே.
உரை
   
7இறந்தார் என்பும், எருக்கும், சூடிப்
புறங்காட்டு ஆடும் புனிதன் கோயில்-
சிறந்தார், சுற்றம், திரு, என்று இன்ன
துறந்தார் சேரும்-சோற்றுத்துறையே.
உரை
   
8காமன் பொடியாக் கண் ஒன்று இமைத்த
ஓமக் கடலார் உகந்த இடம் ஆம்-
தேமென்குழலார் சேக்கை புகைத்த
தூமம் விசும்பு ஆர்-சோற்றுத்துறையே.
உரை
   
9இலையால், அன்பால், ஏத்துமவர்க்கு
நிலையா வாழ்வை நீத்தார் இடம் ஆம்-
தலையால்-தாழும் தவத்தோர்க்கு என்றும்
தொலையாச் செல்வ-சோற்றுத்துறையே.
உரை
   
10சுற்று ஆர் தரு நீர்ச் சோற்றுத்துறையுள்
முற்றா மதி சேர் முதல்வன் பாதத்து
அற்றார் அடியார் அடி நாய் ஊரன்
சொல்-தான் இவை கற்றார் துன்பு இலரே.
உரை