பாட்டு முதற்குறிப்பு அகராதி

9. சேதிராயர் திருவிசைப்பா

28. கோயில்

287.

அன்ற ருக்கனைப் பல்லிறுத் தானையைக்
கொன்று காலனைக் கோள்இழைத் தீர்எனும்
தென்ற லார்பொழில் தில்லையு ளீர்இவள்
ஒன்று மாகிலள் உம்பொருட்டே.                   (9)
 


287.     அருக்கன்-சூரியன்.   சூரியனைப் பல்  இறுத்தது தக்கன்
வேள்வியில்.  ‘‘இறுத்து,  கொன்று’’  என்ற  எச்சங்கள் எண்ணின்கண்
வந்தன.      கோள்-உயிரைக்       கொள்ளுதல்;         கொலை.
இழைத்தீர்-செய்தவரே.    எனும்-என்று    சொல்லுவாள்.     ‘இவள்
உம்பொருட்டு   ஒன்றும்   ஆகிலள்’  என்க.  உம்பொருட்டு-உம்மை
அடையவேண்டி.    ஒன்றும்    ஆகிலள்-ஒருபொருளும்    ஆகாது
அழிந்தொழிகின்றாள்.  ‘இவளைக்  கடைக்கணித்தல்      வேண்டும்’
என்பது குறிப்பெச்சம்.  இதனுள் முன்னைத்   திருப்பாட்டில்  ‘அன்று
பன்றிப்பின்  ஏகிய’   என்னும்  பொருளைத்   தொடர்ந்து,  ‘அன்று
அருக்கனைப்   பல்   இறுத்து,   என்று  வந்த   பொருள் அளவே
அந்தாதிபோலும் !


மேல்