பாட்டு முதற்குறிப்பு அகராதி

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

11. திருமுகத்தலை

119. 
  

என்னைஉன் பாத பங்கயம் பணிவித்
   தென்பெலாம் உருகநீ எளிவந்
துன்னைஎன் பால்வைத் தெங்கும்எஞ் ஞான்றும்
   ஒழிவற நிறைந்தஒண் சுடரே !
முன்னைஎன் பாசம் முழுவதும் அகல
   முகத்தலை யகத்தமர்ந் தெனக்கே
கன்னலும் பாலும் தேனும்ஆ ரமுதும்
   கனியுமாய் இனியைஆ யினையே.               (8)
 

119. ‘‘எங்கும் எஞ்ஞான்றும் ஒழிவற நிறைந்த ஒண்சுடரே’’ என்றது,
‘அந்நிலை  எனக்குப் புலனாம்படி நின்ற ஞானவடிவினனே’ என்றபடி.
எனவே,  இது, தம் அனுபூதி நிலையை எடுத்தோதியதாயிற்று. ‘‘பாசம்’’
என்றது,  வினையைக்  குறித்தது.  ‘அகலப் பணிவித்து’ என முன்னே
கூட்டுக. ‘‘கனியும் ஆய்’’ என்றதில் ‘ஆய்’ என்பதற்கு, ‘போன்று’ என
உரைக்க.   ‘இதற்கு   யான்   செய்யும்   கைம்மாறு  என்’  என்பது
குறிப்பெச்சம்.  


மேல்