பாட்டு முதற்குறிப்பு அகராதி

8. புருடோத்தம நம்பி திருவிசைப்பா

26. கோயில்

260.

எழுந்தருளாய் எங்கள் வீதி யூடே
   ஏதமில் முனிவரோ டெழுந்த ஞானக்
கொழுந்தது வாகிய கூத்த னேநின்
   குழையணி காதினின் மாத்தி ரையும்
செழுந்தட மலர்புரை கண்கள் மூன்றும்
   செங்கனி வாயும்என் சிந்தை வௌவ
அழுந்தும்என் ஆருயிர்க் கென்செய் கேனோ
   அரும்புனல் அலமரும் சடையினானே.            (4)
 


260.     ‘‘எழுந்தருளாய் எங்கள் வீதியூடே’’ என்பதனை இறுதியிற்
கூட்டுக.   ஏதம்   -  குற்றம்.  முனிவர்,  பதஞ்சலி,  வியாக்கிரபாதர்
முதலியோர்.   ‘தில்லைவாழந்தணர்’   எனலும்  ஆம்.  ‘‘கொழுந்தது’’
என்பதில்   அது,   பகுதிப்பொருள்  விகுதி.  கொழுந்து,   முடிநிலை.
’மாத்திரை’   என்பதும்  ஓர்  காதணியே.  வௌவ-வௌவினமையால்
அழுந்தும்-துன்பத்தில்    ஆழ்கின்ற.    உயிர்க்கு-உயிர்    நிற்றற்கு.
அலமரும்-அலைகின்ற.  ‘நீ  எங்கள் வீதியூடே எழுந்தருளினால் என்
உயிர் நிற்கும்’ என்றவாறு.


மேல்