பாட்டு முதற்குறிப்பு அகராதி

8. புருடோத்தம நம்பி திருவிசைப்பா

26. கோயில்

265.

எங்களை ஆளுடை ஈசனேயோ !
   இளமுலை முகம்நெக முயங்கி நின்பொற்
பங்கயம் புரைமுக நோக்கி நோக்கிப்
   பனிமதி நிலவதென் மேற்படரச்
செங்கயல் புரைகண்ணி மார்கள் முன்னே
   திருச்சிற்றம் பலமுட னேபு குந்து
அங்குன பணிபல செய்து நாளும்
   அருள்பெறின் அகலிடத் திருக்க லாமே.         (9)
 


265. நெக - குழைய. முயங்கி-தழுவி. பொற் பங்கயம், இல்பொருள்
உவமை.  நிலவு  -  மதியினது  ஒளி.  அது, பகுதிப் பொருள் விகுதி.
‘‘செங்கயல்   புரைகண்ணிமார்கள்   முன்னே’’   என்றது,   ‘ஏனைய
மகளிரினும்  முற்பட்டு’  என்றவாறு. ‘முன்னே புகுந்து’ என  இயையும்.
உடனே   -  விரைவாக.  ‘நாளும்  செய்து’  என  முன்னே  சென்று
இயையும்.  அகலிடம்,  பூமி,  இருக்கலாம்  -  உயிர் வாழ்தல்  கூடும்.
‘ஈசனேயோ,  முன்னே’  உடனே  புகுந்து,  முயங்கி,  நோக்கிநோக்கி
நாளும்   பணி  பல  செய்து  அருள்பெறின்  இருக்கலாம்;  அல்லது
கூடாது’   எனத்   தனது  ஆற்றாமை  மிகுதி  கூறினாள்.  இதனால்
இவ்வாசிரியரது  பேரன்பு அறியப்படும். ‘‘நிலவு என்மேல் படரப் பணி
பல  செய்து’’  என்றதனால்,  ‘அணுக்கத்  தொண்டுகள்  பல  செய்து’
என்றதாயிற்று.


மேல்