21. ஏர்-அழகு, ‘‘கற்பகம் ஒத்து’’ என்றது எண்ணின் கண் வந்த எச்சமாகலின், ‘கற்பகம் ஒத்தவனும், இருபுருவமும், மூன்று கண்களும் உடையவனும் ஆகிய உனது’ என உரைக்க. சிலைப் புருவம்-வில்போலும் புருவம். ‘‘ஆயிரம், நூறாயிரம் என்றது. அளவின்மை குறித்தவாறு. ‘‘பிதற்றும்’ என்றது, அன்பு மீதூர்ந்து சொல்லும்’ என்றபடி, ‘‘பெரும்பித்தர் கூடிப் பிதற்றும் அடி’‘ ( திருமுறை-6-6.4.) ‘‘பித்தில னேனும் பிதற்றில னேனும் பிறப்பறுப்பாய்எம் பெருமானே’’ (திருவாசகம்-எண்ணப் பதிகம்-4) என்றாற்போல வருவன பலவுங்காண்க. ‘‘நீர்கொள் சடை’’ என்றது, உடம்பொடு புணர்த்தலாகலின், நீரும் தனித்தெண்ணப்படும். ‘‘சடை’’ என்றதனையும் செவ்வெண்ணாக்கி ‘அதன்கண்வாழ் புதுமதி’ என உரைக்க. மத்தம்-ஊமத்த மலர். நிகழ்ந்த-உலவலாயின. |