பாட்டு முதற்குறிப்பு அகராதி

9. சேதிராயர் திருவிசைப்பா

28. கோயில்

285.

கொடியைக் கோமளச் சாதியைக் கொம்பிளம்
பிடியை என்செய்திட் டீர்பகைத் தார்புரம்
இடியச் செஞ்சிலை கால்வளைத் தீர்என்று
முடியும் நீர்செய்த மூச்சறவே.                    (7)
 


285.  ‘‘பகைத்தார் புரம்.. .. .. .. கால்வளைத்தீர்’‘ என்பதை முதலிற்
கொள்க.     கொடி-பூங்கொடிபோன்றவள்.     கோமளச்சாதி-அழகிய
செண்பகப்    பூப்போன்றவள்.   கொம்பு-பூங்கொம்பு    போன்றவள்.
‘கொம்பினை’ என   இங்கும்   இரண்டாவது   விரிக்க.  இளம்  பிடி-
இளமையான   பெண்யானை      போன்றவள்.     இவையெல்லாம்
தலைவியையே       குறித்து         வந்த         பலபெயர்கள்.
இடிய-அழியும்படி.   செஞ்சிலை-நிமிர்ந்து   நின்ற   வில்லை.   கால்
வளைத்தீர்-இரண்டு    காலும்   அணுக   வருமாறு   வளைத்தவரே.
‘பகைத்தார்   புரம்  இடியச்  செய்தது  பொருந்தும்;  காதலித்தாளை
இடியச் செய்தல் பொருந்துமோ’ என்பது குறிப்பு. ‘நீர் செய்த மூச்சறவு
என்று  முடியும்’  என  மாற்றுக. மூச்சறவு-இறந்துபாடு; இஃது அதற்கு
ஏதுவாய  வருத்தத்தைக்  குறித்து  நின்றது.  என்று முடியும்-எந்நாள்
நீங்கும்.  ‘நீங்குதல் இன்றி. இறந்துபாட்டினைச் செய்தேவிடும்போலும்’
என்பது குறிப்பெச்சம்.


மேல்