103. நுதல் விழி-நெற்றியில் உள்ள கண். ‘உடையவனது சடை’ என்க. புரி-புரிவு ; விருப்பம் ; முதனிலைத் தொழிற்பெயர். தாது நி்ன்று ஊத-மகரந்தத்தில் பொருந்தி ஊதுதற்பொருட்டு. போய் வரும்-பலகாலும் சென்று மீள்கின்ற. ‘‘இங்கே’’ என்றதனை, ‘‘கொண்டு’’ என்பதன்பின்னர்க் கூட்டுக. இவ்வாறின்றி, நின்றாங்கு நிறுத்தி, ‘வருங்கால்’ என ஒரு சொல் வருவித்துரைப்பினுமாம். ‘‘கீழ்த் தவழ்’’ என்றதில் தவழ்தல்-விளங்குதல். ‘கிரி தவழ் முகிலின்கீழ்’’ என்றது, ‘மலைகளின் சிகரத்தில் தவழும் இயல்புடைய மேகங்களின் கீழ் விளங்குகின்ற மாடங்கள்’ எனக் கூறு முகத்தான், மாடங்கள் மலைபோல உயர்ந்திருத்தலைக் கூறியவாறு. மாடங்களில் எழுகின்ற ஆரவாரங்களை அவைகளே செய்வனவாகக் குறித்தார். ‘வருகின்ற அம்பலவன்’ என இயைத்து, ’காணப்படுகின்ற அம்பலவன்’ என உரைக்க. ‘‘கொண்டு’’ என்றது, ‘இரந்து பெற்று’ என்றபடி. |