பாட்டு முதற்குறிப்பு அகராதி

7. திருவாலியமுதனார் திருவிசைப்பா

22. கோயில்

224.

தொறுக்கள் வான்கம லம்ம லருழக்
   கக்க ரும்புநற் சாறு பாய்தர
மறுக்க மாய்க்கயல்கள் மடை
   பாய்தில்லை யம்பலவன்
முறுக்கு வார்சிகை தன்னொடு முகிழ்த்த
   அவ்வ கத்துமொட் டோடு மத்தமும்
பிறைக்கொள் சென்னியன்றே பிரியா
   தென்னுள் நின்றனவே.                      (10)
 


224.  தொறுக்கள்-பசுக்கூட்டங்கள். கமல மலர்,வயலில் உள்ளவை.
உழக்க-மேய.     பாய்தர-மேல்நின்று    விழ.    மறுக்கம்-வருத்தம்.
‘பசுக்களின்  கால்களால்  மிதிபட்டும்.  கருப்பஞ்சாற்றின்  வீழ்ச்சியால்
தாக்குண்டும் கயல் மீன்கள் வருந்துவவாயின’ என்பதாம்.  ‘மடைக்கண்
பாய்’  என உருபு விரித்துரைக்க. வார் சிகை-நீண்ட சடை. ‘‘முகிழ்த்த’’
என்றதன்பின்னர்  நின்ற  வகரமெய்  விரித்தல்.  ‘வாசிகை   எனவும்.
‘அகத்தி’  எனவும்  ஓதுவன பாடம் அல்ல. ‘‘பிறைக்கொள்’’ என்றதில்
உம்மை  தொகுத்து,  ககர ஒற்று விரிக்கப்பட்டது. இதனுள், ‘மடை,பிரி’
என்பன கூன்.  


மேல்