சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

14. திருப்பூவணம்


146.


  

கரைகடல் ஒலியின் தமருகத் தரையிற்
   கையினிற் கட்டிய கயிற்றால்
இருதலை ஒருநா இயங்கவந் தொருநாள்
   இருந்திடாய் எங்கள்கண் முகப்பே
விரிதிகழ் விழவின் பின்செல்வோர் பாடல்
   வேட்கையின் வீழ்ந்தபோ தவிழ்ந்த
புரிசடை துகுக்கும் ஆவண வீதிப்
   பூவணம் கோயில்கொண் டாயே.               (3)  
 

146.     கரை-ஒலிக்கின்ற.  கடல்  ஒலியின்-கடல்  ஒலி  போன்ற
ஒலியினையுடைய.  ‘‘தமருகத்து  அரையின்’’ என்பது முதல், ‘‘இயங்க’’
என்பதுகாறும்  உள்ள பகுதியால் இறைவன் தனது  தமருகத்தினின்றும்
ஒலியை எழுப்பும் முறை விளக்கப்பட்டது. தமருகம்- உடுக்கை.  ‘அதன்
அரைக்கும்  உனது கைக்குமாகக் கட்டப்பட்டுள்ள கயிற்றினால்  அதன்
இருபக்கத்தும்    ஒருநாவே   சென்று   தாக்கி   ஒலியை    எழுப்ப,
அந்நிலையோடே   எங்கள்  கண்களின்  முன்னே  ஒருநாள்   வந்து
இருந்தருள்’  என்றவாறு.  விரி-விரிவு  ; முதனிலைத் தொழிற்  பெயர்.
‘‘விழவு’’   என்றது,   அதிற்கூடும்   மக்கட்   கூட்டத்தினை. பாடல்
பாடுவோர்  மக்கட்  கூட்டத்தின் நெருக்கத்திடையே செல்லாது பின்பு
செல்லுதலின்,  ‘‘விழவின்பின்  செல்வோர்  பாடல்’’ என்றார். ‘விழவிற்
பின்செல்வோர்   பாடல்’  எனப்  பாடம்  ஓதி  விழாவில்  ‘நின்பின்
செல்வோரது   பாடல்   ;   என்று   உரைத்தலும்   ஆம்.   பாடல்
வேட்கையின்-பாடல்மேல்  எழுந்த வேட்கையினால், ‘வீழ்ந்த புரிசடை,
போது          அவிழ்ந்த      புரிசடை’    என்க.   ‘நின்புரிசடை’ 
என        உரைக்க.     வீழ்ந்த    -   அவிழ்ந்த,     அடியாரது
பாடலை     இறைவன்   இனிதாகக் கேட்டுத் தலையை அசைத்தலால்,
கட்டியுள்ள அவனது சடை அவிழ்ந்து  வீழ்ந்தது. துகுக்கும்- தூர்க்கின்ற
;  நிரம்பச்  சொரிகின்ற.  ‘‘போது   அவிழ்ந்த புரிசடை’’ என்றதனால்,
சொரியப்படுவன  அப்போதுகளே  ஆயின. போது-பேரரும்பு ; அவை,
கொன்றை, ஆத்தி முதலியவற்றின்   அரும்புகளாம். அவிழ்ந்த-மலர்ந்த.
‘விழாக் காலங்களில் இறைவனது சடைக்கண் உள்ள மலர்களே வீழ்ந்து
நிரம்பும்  பெருமையை  உடையன, திருப்பூவணத்தின் கடை வீதிகள்’
என்றவாறு.


மேல்