சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

17. திருவிடைமருதூர்


181.

கலங்கலம் பொய்கைப் புனல்தெளி விடத்துக்
   கலந்தமண் ணிடைக்கிடந் தாங்கு
நலங்கலந் தடியேன் சிந்தையுட் புகுந்த
   நம்பனே ! வம்பனே னுடைய
புலங்கலந் தவனே ! என்றுநின் றுருகிப்
   புலம்புவார் அவம்புகார் அருவி
மலங்கலங் கண்ணிற் கண்மணி யனையான்
   மருவிடந் திருவிடை மருதே.                   (9)
 

181.     ‘சேற்றால்  கலங்கல்  பெற்ற    நீர்   தேற்றாங்கொட்டை
சேர்ந்ததனால்  தெளிவுபெற்ற  பின்னர்   அச்சேற்றோடே இருப்பினும்
கலங்கல்  இன்றித் தெளிந்தே நிற்றல் போல’  என்பது முதல் அடியின்
பொருள்.   தெளிவிடத்து-தெளியும்பொழுது.   கலங்கல்  நீர்  தெளிவு
பெறுதல்  தேற்றாங்கொட்டையால்  என்பது   நன்கறியப்பட்டதாகலின்,
அதனைக்  கூறாராயினார்.  நலம்-திருவருள்.   ‘‘கலந்து’’  என்றதனை,
‘கலக்க’    எனத்    திரிக்க.    கலந்து,    அதனால்    உலகியலாற்
கலங்காதிருக்குமாறு’  எனத்  தன்  காரியம்  தோற்றி  நின்றது. புலம்,
ஐம்புலன்;  இஃது  அவற்றான்  வரும்   இன்பத்தைக் குறித்து நின்றது.
திருவருள்கைவரப் பெற்றோர்க்கு ‘பெற்ற சிற்றின்பமே பேரின்பமாய்’
விளைதலின்    (திருவுந்தியார்-33.)    ‘‘புலங்கலந்தவனே’’   என்றார்.
‘‘வம்பனேனுடைய  புலங்கலந்தவனே’’  என்றது, உருகிப் புலம்புவாரது
கூற்றை,  கொண்டுகூறியது.  எனவே,   ‘‘வம்பனேன்’’ என்றது பன்மை
யொருமை   மயக்கமாம்.   புலம்புவார்   -    அழுகின்றவர்.  அவம்
புகார்-வீண்  செயலிற்  செல்லாதவர்.   ‘புலம்புவாரும், அவம் புகாரும்
ஆகிய  அவரது  கண்ணில்’  என்க.   அருவி  மலங்கல் கண்-அருவி
போல     நீர்     மல்குதலையுடைய    கண்.    அம்,    சாரியை,
கண்மணிபோறலாவது, இன்றியமையாப் பொருளாகி நிற்றல்.


மேல்