சொல்லகராதிச் சுருக்கம்

5. கண்டராதித்தர் திருவிசைப்பா

20. கோயில்


199.

களிவான் உலகிற் கங்கை நங்கை
   காதலனே அருளென்
றொளிமால் முன்னே வரங்கி டக்க
   உன்னடி யார்க்கருளும்
தெளிவா ரமுதே தில்லை மல்கு
   செம்பொனின் அம்பலத்துள்
ஒளிவான் சுடரே உன்னை நாயேன்
   உறுவதும் என்றுகொலோ!                      (5)
 

199.     களி  வான்  உலகு-களித்து   வாழ்தற்குரிய   வானுலகம்.
‘அங்குள்ள கங்கை’ என்க. ‘பகீரதன் பொருட்டு வானுலகிலிருந்து  வந்த
கங்கையைச்  சிவபெருமான்  சடையில் தாங்கினார்.’ என்பது   வரலாறு.
ஒளி  மால்-அழகையுடைய  திருமால்.  முன்னே-உனது    திருமுன்பில்.
வரம்  கிடக்க-வரம்  வேண்டிப்  பாடு கிடக்க. ‘அவனுக்கு  அருளாமல்
அடியார்க்கு  அருளுகின்றாய்’  என்றபடி. தில்லைக்   கூத்தப்பெருமான்
திருமுன்பில்   திருமால்   கிடந்த   கோலத்தில்  இருத்தல்    காண்க.
‘‘வரங்கிடந்  தான்தில்லை  யம்பல  முன்றிலம்  மாயவனே’’   என்றார்
திருக்கோவையாரினும்     (86).     தெளிவுஆர்-  தெளிவுபொருந்திய.
உறுவது-அடைவது.


மேல்