2. சேந்தனார் திருவிசைப்பா
7. திருவிடைக்கழி
79. | கொழுந்திரள் வாயார் தாய்மொழி யாகத் தூமொழி அமரர்கோ மகனைச் செழுந்திரட் சோதிச் செப்புறைச் சேந்தன் வாய்ந்தசொல் லிவைசுவா மியையே செழுந்தடம் பொழில்சூழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற எழுங்கதி ரொளியை ஏத்துவார் கேட்பார் இடர்கெடும் மாலுலா மனமே. (11)திருச்சிற்றம்பலம் |
79. கொழுந் திரள் வாய் ஆர் தாய்- செழுமையாய்த் திரண்ட வாயினையுடைய செவிலி. வழிபடுவோர்க்கு வரங் கொடுத்தல் பற்றி அமரரை, ‘‘தூமொழி அமரர்’’ என்றார். ‘செப்புறைச் சொல்’ என இயைத்து, ‘செப்பென்னும் உறைபோல்வதாகிய சொல்’ என உரைக்க. முருகனாகிய அருமணியைத் தன்னுட் கொண்டிருத்தல் பற்றி இங்ஙனம் கூறினார். ‘செப்புரை’ எனவும், ‘செப்புதல்’ எனவும் பாடம் ஓதுப. வாய்ந்த- பொருந்திய : இதனை, ‘‘கோமகனை’’ என்றதனோடு கூட்டுக. ‘‘இவை’’ என்றதில், ‘இவற்றால்’என உருபு விரிக்க. சுவாமி - முருகன் ‘‘சுவாமியையே’’ என்ற ஏகாரம் அசைநிலை ‘கேட்பார்க்கு’ என்னும் நான்காவது, தொகுத்தலாயிற்று. ‘மனம் இடர்கெடும்’ என, இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் ஏற்றப்பட்டது. ‘‘மாலுலா மனம்’’ என்பது, முதல் திருப்பாட்டிற் சென்று மண்டலித்தல் அறிக. |