சொல்லகராதிச் சுருக்கம்

சேந்தனார் திருப்பல்லாண்டு

29. கோயில்


294.

சேவிக்க வந்தயன் இந்திரன் செங்கண்மால்
   எங்குந் திசைதிசையன
கூவிக் கவர்ந்து நெருங்கிக் குழாங்குழா
   மாய்நின்று கூத்தாடும்
ஆவிக் கமுதைஎன் ஆர்வத் தனத்தினை
   அப்பனை ஒப்பமரர்
பாவிக்கும் பாவகத் தப்புறத் தானுக்கே
   பல்லாண்டு கூறுதுமே.                         (6)
 


294. சேவிக்க-வணங்குதற்கு, ‘‘வந்து’’ என்றதை, ‘‘மால்’’ என்பதன்
பின்னர்க்  கூட்டுக.  ‘திசைதிசையன  எங்கும்’  என மாற்றுக. ‘‘திசை
திசை’’  என்னும்  அடுக்குப்  பன்மை  குறித்து  நின்றது. ‘‘திசையன’
என்றதற்கு.  திசைகளாகிய இடங்களில்’ என இரைக்க. கூவி-அழைத்து.
‘‘கவர்ந்து’’  என்றதற்கு.  ‘வழிபாட்டுப்  பொருள்களைக் கைக்கொண்டு’
என  உரைக்க.  ‘‘ஆடும் அமுது’’ என்றதில் உள்ள ‘‘அமுது’’ என்பது,
‘அரசன்   ஆ   கொடுக்கும்   பார்ப்பான்’   என்பதில்  ‘பார்ப்பான்’
என்பதுபோலக்   கோடற்  பொருட்  பெயராய்  நின்றது.  உடல்நலம்
ஒன்றே  பயக்கும்  தேவரமுதினும்  வேறாதலை  விளக்க,  ‘‘ஆவிக்கு
அமுது’’  என்றார்.  இதுவும்,  இல்பொருள் உவமை. அமுது-அமிர்தம்
போல்பவன்.  என்  ஆர்வத்  தனம்-எனது  அவாவிற்குரிய  பொருள்
(செல்வம்).   ஒப்பு  அமரர்-பிறப்புவகையால்  ஒரு  நிகராய   தேவர்.
அஃதாவது   ‘வானவர்’   என்றபடி.   பாவிக்கும்  பாவகம்-நினையும்
நினைவு.  அவர் தம் நினைவிற்கு அகப்படாமையின்,  ‘‘அப்புறத்தான்’’
என்றார்.


மேல்