சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

13. கங்கைகொண்ட சோளேச்சரம்


136.

ஐயபொட் டிட்ட அழகுவா ணுதலும்,
   அழகிய விழியும், வெண் ணீறும்,
சைவம்விட் டிட்ட சடைகளும், சடைமேல்
   தரங்கமுஞ் சதங்கையுஞ் சிலம்பும்
மொய்கொள்எண் திக்கும் கண்டநின் தொண்டர்
   முகம்மலர்ந் திருகண்நீர் அரும்பக்
கைகள்மொட் டிக்கும் என்கொலோ ! கங்கை
   கொண்டசோ ளேச்சரத் தானே.                 (4)
 

136.     ஐய பொட்டு-அழகிய திலகம். ‘அளக வாள்நுதல்’ என்பது
பாடம்  அன்று.  சைவம்-சிவ வேடம். சிவபெருமானுக்கு உரிய சிறப்பு
அடையாளங்களுள்     சடை     சிறந்ததொன்றாதலின்,    ‘‘சைவம்
விட்டிட்டசடைகள்’’  என்றார்.  நடனம்  செய்பவர்  காலில்  சதங்கை
அணிதல்  இயல்பு  என்க. மொய் கொள்-சூழ்தலைக் கொண்ட. ‘‘எண்
திக்கின்  கண்ணும்’  என  உருபு விரிக்க. ‘‘மலர்ந்து’’, ‘‘மொட்டிக்கும்’’
எனச் சினை வினை முதல் மேல் நின்றன. இவ்வாறன்றி,  ‘‘தொண்டர்’’
என்றதில்  ஆறாவது  விரித்து,  ‘‘மலர்ந்து’’ என்பது, ‘மலர’ என்பதன்
திரிபு   என்றலும்   ஆம்.  என்னோ-காரணம்  யாதோ.  ‘முன்னைத்
தவத்தின்  பயனாகக்  கிடைத்த அன்பே காரணம்’ என்பதாம். கொல்,
அசைநிலை. 


மேல்