3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
16. தஞ்சை இராசராசேச்சரம்
| 164. | சடைகெழு      மகுடம் தண்ணிலா விரிய வெண்ணிலா விரிதரு தரளக்
 குடைநிழல் விடைமேற் கொண்டுலாப் போதும்
 குறிப்பெனோ  ?  கோங்கிண  ரனைய
 குடைகெழு  நிருபர்  முடியொடு முடிதேய்ந்
 துக்கசெஞ் சுடர்ப்படு குவையோங்
 கிடைகெழு மாடத் திஞ்சிசூழ் தஞ்சை
 இராசரா சேச்சரத் திவர்க்கே.                        (3)
 
 | 
| 
 164.         ‘மகுடத்தின்கண்’ என உருபு விரிக்க. ‘வெண்ணிலா விரிதருகுடை’       என்க.  தரளத்தால் வெண்ணிலா விரிவதாயிற்று.      தரளம்-முத்து.
 குறிப்பு-கருத்து.   ‘‘குறிப்பென்னோ’’       என்றது,  ‘மாதர் உள்ளங்களைக்
 கவர்வதுபோலும்’               என்னும்     குறிப்புடையது.     கோங்கு
 இணர்-கோங்கம்பூக்கொத்து  ;        இது  குடைக்கு வடிவுவமை. துணியால்
 ஆக்கப்பட்ட          குடைக்கு       இவ்வுவமை          பொருந்துவதாகும்.
 தேய்ந்து-தேய்தலால்.       உக்க-உதிர்ந்த.    ’உக்க  குவை’ என      இயையும்.
 ‘‘செஞ்சுடர்ப்படு  குவை’’  என்றதனால்,        ‘மாணிக்கக்  குவை’ என்பது
 தோன்றிற்று.         படு-உண்டாகின்ற.    குவை         ஓங்கு    இடைகெழு
 மாடம்-குவியல்கள்   மிக்கிருக்கின்ற        இடத்திற்  பொருந்திய        மாடம்.
 இடம்,       வீதி.  ‘இடைகழி  மாடம்   என்பதும்       பாடம். ‘மாடத் தஞ்சை’
 என்க. இப்பாட்டு,      காதல் நோய் கொண்டாள் கூற்றாய் அமைந்தது.
 |