சொல்லகராதிச் சுருக்கம்

7. திருவாலியமுதனார் திருவிசைப்பா

23. கோயில்


228.

அலந்து போயினேன் அம்பலக் கூத்தனே!
   அணிதில்லை நகராளீ!
சிலந்தி யைஅர சாள்கஎன் றருள்செய்த
   தேவதே வீசனே
உலர்ந்த மார்க்கண்டிக் காகிஅக் காலனை
   உயிர்செக உதைகொண்ட
மலர்ந்த பாதங்கள் வனமுலை மேல்ஒற்ற
   வந்தருள் செய்யாயே.                         (3)
 


228.     சிவபெருமான்,  சிலந்தியை  அரசாளச்   செய்தமையைக்
கோச்செங்கட்சோழ  நாயனார்  புராணத்துக்  காண்க. ‘தேவ தேவாகிய
ஈசனே’  என்க.  தேவ தே - தேவர்க்குத் தேவன்.  ‘‘தேவ தேவீசனே’’
என்ற இருசீர்களும் வேறுபட வந்தன. ‘‘உலந்த’’  என்பதற்கு, வாழ்நாள்
உலந்த’  என  உரைக்க.  ‘‘உலத்தல் -முடிதல், ‘‘மார்க்கண்டி’’ என்பது,
‘மிருகண்டு  முனிவர் மகன்’ என்னும் பொருளது.  ஆகி - துணையாகி.
‘‘அக்  காலனை,  என்னும்  சுட்டு, ‘அந்நாளில் வந்த காலனை, எனப்
பொருள்  தந்தது.  செக-அழிக்கக்கருதி,  உதைகொண்ட -  உதைத்தற்
றொழிலை   மேற்கொண்ட.   ‘உதைகொண்ட   பாதங்கள்,   மலர்ந்த
பாதங்கள்’  எனத்  தனித்தனி  முடியும்.  ‘பாதங்களால்  வந்து’  என
மூன்றாவது      விரித்து    முடிக்க.       வனம்   -      அழகு.

ஒற்ற-பொருந்த: தழுவுதற்பொருட்டு. ‘என் வனமுலைமேல் ஒற்ற’என்று எடுத்துக்கொண்டு, ‘‘ஈசனே’’ என்றதன்பின் கூட்டி உரைக்க. 


மேல்