சொல்லகராதிச் சுருக்கம்

7. திருவாலியமுதனார் திருவிசைப்பா

23. கோயில்


232.

உடையும் பாய்புலித் தோலும்நல் லரவமும்
   உண்பதும் பலிதேர்ந்து
விடைய தூர்வதும் மேவிடங் கொடுவரை
   ஆகிலும் என்னெஞ்சம்
மடைகொள் வாளைகள் குதிகொளும் வயற்றில்லை
   யம்பலத் தனலாடும்
உடைய கோவினை யன்றிமற் றாரையும்
   உள்ளுவ தறியேனே.                         (7)
 


232.   ‘‘உடையும், உண்பதும்’’ என்ற உம்மைகள் எச்சப்  பொருள.
நஞ்சின்றியிருத்தலைக் குறிக்க, "நல்அரவம்’’ என்றார். அரவம் (பாம்பு)
கச்சாக  நின்று  உடையைக்  காத்தலின்  அதனையும், ‘உடை’  என்று
சார்த்திக்கூறினார்.  பலி-பிச்சை.  ‘‘விடையது’’ என்றதில் அது,  பகுதிப்
பொருள்  விகுதி.  மேவு இடம்-இருக்கும் இடம். ‘‘இடம்’’  என்றதிலும்,
எச்ச  உம்மை  விரிக்க, வரை-மலை; கைலை காடு  அடர்ந்து, புலியும்,
அரிமாவும்  போல்வன  வாழ்தலின்,  ‘கொடிது’  எனப்பட்டது.  மடை
கொள்வாளை- மடையை வாழும் இடமாகக் கொண்ட  வாளை மீன்கள்.
‘‘மடை’’  என்றது, ஆதனால் தடுக்கப்படும் நீரை, ‘அனலோடு  ஆடும்’
என    மூன்றாவது   விரித்துரைக்க.   உடைய   கோ- எல்லாரையும்,
எல்லாவற்றையும்  ஆளாகவும்,  உடைமையாகவும்  உடைய தலைவன்.
‘யாரையும்’     என்பது,      ‘ஆரையும்’     என       மருவிற்று.
‘தில்லையம்பலத்தாடும்  கோவிற்கு உடையும்   தோலும்,  அரவமுமே.
உண்பதும்   பலி   தேர்ந்தே;  ஊர்வதும்    விடையே;  மேவிடமும்
கொடுவரையே.   ஆகிலும்   என்  நெஞ்சம்  அவனையன்றி   மற்று
ஆரையும்  உள்ளுவதை  நான் காணவில்லை’  என்க.  விரிக்கப்படும்
ஏகாரங்கள் பிரிநிலை.


மேல்