சொல்லகராதிச் சுருக்கம்

1. திருவிசைப்பா

1. கோயில்


1.

ஒளிவளர் விளக்கே! உலப்பிலா ஒன்றே!
   உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே!
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே!
   சித்தத்துள் தித்திக்குந் தேனே!
அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே!
   அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
   தொண்டனேன் விளம்புமா விளம்பே.             (1)
 

1.  இதனுள்,   ‘விளக்கு’    முதலியனவாகக்      கூறப்பட்டவை
உவமையாகுபெயர்கள். ‘‘ஒளிவளர்  விளக்கு’’  என்றதில்,   வளர்தல்,
முடிவின்றி  விளங்குதல்.  எனவே,  ‘நெய், திரி, அகல்  என்பவற்றைக்
கொண்டு ஏற்றப்பட்ட செயற்கை விளக்காகாது  இயற்கையில் விளங்கும்
விளக்கு’ என்றதாயிற்று. இதனையே, ‘நந்தா விளக்கு’ எனவும், தூண்டா
விளக்கு’   எனவும்   கூறுவர்.   மாணிக்கமும்,   வயிரமும்  போன்ற
மணிவிளக்குக்கள்  இங்ஙனம் அமைவனவாம். எனினும்,   ‘அவற்றினும்
மேம்பட்ட விளக்கு’ என்பதையே, ‘உலப்பிலா ஒன்றே’’  என்பதனாலும்,
அவ்வாறாதல் அறிவே உருவாய் நிற்றலாலாம்’ என்பதை, ‘‘உணர்வுசூழ்
கடந்ததோர் உணர்வே’’ என்பதனாலும் குறித்தருளினார்.

‘‘உணர்வு’’     இரண்டனுள்  முன்னையது   உயிரினது    அறிவு.
சூழ்-எல்லை.    இறைவன்    உயிர்கள்     அனைத்தையும்   தனது
வியாபகத்துள்  அடக்கி  நிற்பவன்  ஆதலின்.  அவனை,   ‘அவற்றது
அறிவின்   எல்லையைக்  கடந்தவன்’  என்றார்.   ‘கடவுள்’  என்னும்
சொற்கும்  இதுவே  பொருளாதல் அறிக. தெளி வளர்- தூய்மை மிக்க.
‘பளிங்கின்  திரளாகிய அழகிய  குன்றே’ என உரைக்க. மணி- அழகு.
சிவபெருமான்     பளிங்குமலைபோல     விளங்குதல்,    திருநீற்று
ஒளியினாலாம்.     அளி-அன்பு.     ஆனந்தக்   கனி- இன்பமாகிய
சாற்றையுடைய  பழம்.  ‘இன்பம்’  என்பது, தலைமை  பற்றி, வரம்பில்
இன்பமாகிய   பேரின்பத்தையே   குறித்தது.   முன்னர்,  ‘சித்தத்துள்
தித்திக்கும்     தேன்’’     என்றது.     துரியநிலைக்கண்   நிகழும்
அனுபவத்தையும்,  பின்னர்,  ‘‘அளிவளர் உள்ளத்து  ஆனந்தக் கனி’’
என்றது,  அதீதநிலைக்கண்  நிகழும் அனுபவத்தையும்  குறித்தனவாம்.
வெளிவளர்  கூத்து-காட்சிப்  புலனாய்,  முடிவின்றி   நிகழும் நடனம்.
‘வெளியாகி’  என ஆக்கம் வருவிக்க. தெய்வக் கூத்து-அருள்  நடனம்.
அஃதாவது,  உயிர்கட்கு ‘பெத்தம்’, ‘முத்தி’ என்னும்  இருநிலைகளிலும்
ஏற்றபெற்றியால்  அருள்புரியும் நடனம். அவ்விருவகை   நடனங்களின்
இயல்பையும்

‘‘தோற்றம் துடியதனில்; தோயும் திதிஅமைப்பில்;
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம்-ஊற்றமா
ஊன்று மலர்ப்பதத்தே உற்ற திரோதம்; முத்தி 
நான்ற மலர்ப்பதத்தே நாடு’’

எனவும்,

‘‘மாயை தனைஉதறி, வல்வினையைச் சுட்டு, மலம்
சாய அமுக்கி,அருள் தானெடுத்து-நேயத்தால்
ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல்
தான்எந்தை யார்பரதந் தான்’’

எனவும்   போந்த   உண்மை  விளக்க  வெண்பாக்களால்  முறையே
உணர்க.

விளம்புதல்-துதித்தல், ‘‘விளம்புமா விளம்பு’‘  என்பதற்கு,  ‘யான்
விளம்புதற்பொருட்டு,  நீ  விளம்புவாயாக’  எனவும்,  இதனுள்   இனி
வரும்  திருப்பாட்டுக்களிலும்,  ‘‘பணியுமா  பணியே, கருதுமா  கருதே’’
முதலியவற்றிற்கும் இவ்வாறேயாகவும் உரைக்க. இவற்றால்,  இறைவனது
காணும் உபகாரத்தின் இன்றியமையாமை விளக்கப்படுகின்றது.

‘காட்டும் உபகாரம், காணும் உபகாரம்’ என்பவை  பற்றி இங்குச்
சிறிது கூறற்பாற்று.

‘‘அறிவிக்க     அன்றி  அறியா  உளங்கள்’’    (சிவஞானபோதம்
சூ.8.அதி.2)  என்றபடி, உயிர்களின் அறிவு,  அறிவிக்கும் பொருளின்றி
ஒன்றை  அறியும்  தன்மையைப்பெறாது.  ஆகவே, உயிரினது  அறிவு,
பிறிதோர்  ஒளியின்றித் தானே உருவத்தைக் காணமாட்டாத கண்ணின்
ஒளிபோன்றதாம்.  அதனால்,  கதிரவன்  ஒளி கண்ணொளியிற் கலந்து
உருவத்தைக்  காணச்  செய்யும்  முறைபோல,  இறைவன்  உயிரறிவிற்
கலந்து  பொருள்களை  அறியச்  செய்வான்.  இவ்வாறு   செய்வதே,
‘காட்டும் உபகாரம்’ எனப்படும்.


மேல்