சொல்லகராதிச் சுருக்கம்

சேந்தனார் திருப்பல்லாண்டு

29. கோயில்


295.

சீரும் திருவும் பொலியச் சிவலோக
   நாயகன் சேவடிக்கீழ்
ஆரும் பெறாத அறிவுபெற் றேன்பெற்ற
   தார்பெறு வார்உலகில்
ஊரும் உலகும் கழற உழறி
   உமைமண வாளனுக்காட்
பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம்
   பல்லாண்டு கூறுதுமே.                        (7)
 


295.     சீர்-செம்மை;   சிவநெறி   ஒழுக்கம்.   திரு-திருவருள்.
பொலிய-என்னிடத்து  நிலைபெற்று விளங்கும்படி. ‘சேவடிக்கீழ் நின்று’
என  ஒரு  சொல் வருவிக்க. நிற்றல்-பணிசெய்தல். ‘‘பெறாத’’ என்றது,
‘பெறுதற்கரிய’  என்றவாறு.  பெறுதற்கரிய  அறிவாவது,  ‘யாவரையும்,
யாவற்றையும்  உடையவன்  சிவபெருமானே’  என  அறியும்  அறிவு.
‘அவ்வறிவாற்பெற்றது எனக்     காரணம்     வருவித்து, ‘‘பெற்றது’’
என்றதற்கு,  ‘பெற்றபயன்  என  உரைக்க. அங்ஙனம் உரையாவிடில்,
‘‘ஆரும்பெறாத  அறிவு’   என்றதன்   பொருளே     பொருளாய்ச்
சிறப்பின்றாம்.     பயன்,சிவானந்தம். ஆர் - அவ்வறிவைப் பெறாத
எவர்.    ‘அத்தகைய     பயனை   நீவிரும்  பெற்றீராதலின். நாம் அனைவரும்    கூடிப்    பல்லாண்டு       கூறுவோம்’     என
இயைபுபடுத்துரைக்க. ஊர்-வாழும் ஊர். கழற-எடுத்துச் சொல்லும்படி;
இதற்கும்   செயப்படுபொருள்  இனி  வருகின்ற  ‘‘ஆள்’’ என்பதே.
அதனால்,   ‘‘உமை   மணவாளனுக்கு  ஆள்’’ என்பதை, ‘‘உலகில்’’
என்றதன்  பின்னே  வைத்து உரைக்க. உழறி-அவன்  புகழைப்பிதற்றி.
‘பிதற்றி’  என்றார். முற்ற  அறியாது அறிந்தவாறே கூறலின். இதனை,
‘‘நாம்’’என்பதன் பின்னர்க் கூட்டுக. ஆள்-நாம் ஆளான தன்மையை,
‘‘கழற’’   எனவும், ‘‘அறியும்  பரிசு’’  எனவும்  வேறு  வேறு முடிபு
கொள்ளுதலால்,  ‘‘பாரும்’’ என்றது,  கூறியது கூறல் ஆகாமை அறிக.
பரிசு-தன்மை. ‘பரிசினால்’ என மூன்றாவது விரிக்க.


மேல்