சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

13.கங்கைகொண்ட சோளேச்சரம்


141.

பண்ணிய தழல்காய் பாலளாம் நீர்போற்
   பாவமுன் பறைந்துபா லனைய
புண்ணியம் பின்சென் றறிவினுக் கறியப்
   புகுந்ததோர் யோகினிற் பொலிந்து
நுண்ணியை யெனினும் நம்பநின் பெருமை
   நுன்னிடை யொடுங்கநீ வந்தென்
கண்ணினுண் மணியிற் கலந்தனை! கங்கை
   கொண்டசோ ளேச்சரத் தானே.                 (9)
 

141.     பண்ணிய - மூட்டிய தழல் காய் - நெருப்புச்   சுடுகின்ற
(நெருப்பாற்  சுடப்படுகின்ற). ‘‘காய் பால்’’ என்பது செயப்படு பொருட்
கண்   வந்த   வினைத்தொகை.  அளாம்  -  முன்பு  கலக்கப்பட்ட.
‘‘பறைந்து’’  எனப்  பின்னர்  வருகின்றமையின்  வாளா,  ‘‘நீர்போல்’’
என்றார்.  ‘நீர்  பறைவது  போலப் பறைந்து’ என்பது பொருளாயிற்று.
‘நெருப்பு  மூட்டிக்  காய்ச்சப்பட்ட  பாலில்,  முன்பு  கலந்திருந்த நீர்
ஆவியாய்  விரைவில்  நீங்கிவிடப்  பின்பு  நிலைத்து  நின்று  பயன்
செய்யும்   பால்போலும்   புண்ணியம்’  என்பது,  இங்குக் கூறப்பட்ட
பொருள்.   பொருட்கண், பாவம் பறைதல் ஒன்றே கூறினாராயினும்,‘நீ
எனக்குச்    செய்த    திருவருளால்   தூய்மையாக்கப்பட்ட   எனது
உயிரின்கண்   முன்பு   கலந்து   நின்ற   பாவம்  பறைய’  என்பது
உவமையாற்     கொள்ளுதல்     கருத்தென்க.     முன்-விரைவில்,
பறைந்து-நீங்கி.  இதனை,  ‘பறைய’  எனத் திரிக்க. ‘‘சென்று’’ என்றது,
‘நிகழ்ந்து‘  என்னும்  பொருளது.  ‘சென்று  புகுந்தது’ என இயையும்.
‘‘அறிவினுக்கு  அறிய’  என்றதில்  நான்காவது,  கருவிப் பொருட்கண்
வந்தது. ‘கண்ணிற்குக் காணலாம்’ என்பதுபோல. அறிதற்குச் செயப்படு
பொருளாகிய,   ‘உன்னை’  என்பது  வருவித்துக்கொள்க.  ‘‘புகுந்தது’’
என்னும்   வினையாலணையும்   பெயர்  வினைமுதல்  உணர்த்தாது,
‘புகுந்ததனால் விளைந்தது’ எனச் செயப்படு பொருளை உணர்த்திற்று.
‘புகுந்ததாகிய  ஓர்  யோகு’  என்க.  யோகு  - யோகம் :சிவயோகம்.
‘‘நுண்ணியை’’  என்பதில், நுண்ணியையாய் என்னும் ஆக்கம் விரிக்க.
‘அப்  பெருமை’ எனச்சுட்டி உரைக்க. ஒடுங்க-மறைந்து நிற்க: என்றது,
‘என்  திறத்தில்  அதனைக் கொள்ளாது ‘விடுத்து’ என்றவாறு.‘இதற்கு
யான்  செய்யும்  கைம்மாறு  என்’ என்னும் குறிப்பெச்சம், இறுதியில்
வருவித்து முடிக்க.  


மேல்