2. சேந்தனார் திருவிசைப்பா
5. திருவீழிமிழலை
50. | ‘இத்தெய்வ நெறிநன்’ றென்றிருள் மாயப் பிறப்பறா இந்திர சாலப் பொய்த்தெய்வ நெறிநான் புகாவகை புரிந்த புராணசிந் தாமணி வைத்த மெய்த்தெய்வ நெறிநான் மறையவர் வீழி மிழலைவிண் ணிழிசெழுங் கோயில் அத்தெய்வ நெறியிற் சிவமலா தவமும் அறிவரோ அறிவுடை யோரே! (5) |
50. இருள்-அறியாமை. மாயம்-நிலையாமை ‘இவற்றையுடைய பிறப்பு’ என்க. அறா - அறுத்து உய்விக்க மாட்டாத. |
இம்மாட்டமை உடையவாயினும், மாட்டுவபோலச் சொற்சாலம் செய்தல் பற்றி, ‘‘இந்திர சால நெறி’’ என்றார். ‘‘பொய்’’ என்றது போலியை. ‘பொய்த் தெய்வங்களைக்கொண்ட நெறி’ என்க. புரிந்த-இடைவிடாது நின்று அருள்செய்த. புராண சிந்தாமணி- பழைய (எல்லாப் பொருட்கும் முன்னே உள்ள) சிந்தாமணி; என்றது. சிவபெருமானை. வைத்த-அமைத்த. ‘மெய்த் தெய்வ நெறியையுடைய நான்மறையோர்’ என்க. கோயிற்கண் உள்ளதும், அத்தெய்வ நெறிக்கண் விளங்குவதும் ஆகிய சிவம்’ என்க. அவம் - பயனில்லாத பிறபொருள்கள். அறிவரோ-பொருளாக நினைப்பரோ! நினையார். |