3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
12. திரைலோக்கிய சுந்தரம்
130. | ஆறாத பேரன்பி னவர்உள்ளம் குடிகொண்டு வேறாகப் பலர்சூழ வீற்றிருத்தி ; அதுகொண்டு வீறாடி இவள்உன்னைப் பொதுநீப்பான் விரைந்தின்னம் தேறாள்தென் பொழிற்கோடைத் திரைலோக்கிய [சுந்தரனே. (9) |
130. ஆறாத-தணியாத. அன்பு காதலாய் முறுகிய ஞான்று கனல்போல் உள்ளத்தைக் கவற்றுதலின், ‘‘ஆறாத அன்பு’’ என்றாள். ‘‘அன்பினவர்’’ என்றதில், இன்னும், அகரமும் ஆகிய இருசாரியைகள் வந்தன. வேறாக - பேரன்பர் அல்லாத பிறராக. இவர் சிறிதன்பு உடையவர். வீறாடி - அவர் அனைவரினும் பெருமை பெற்றவளாய். உன்னைப் பொது நீப்பான்- உன்னைத் தன் ஒருத்திக்கே உரியனாகச் செய்து கொள்ளுதற்கு, விரைந்து- விரைதலைக் கொண்டு. இன்னும் தேறாள் - இன்னும் அம்மயக்கம் தெளியப்பெற்றிலள். ‘இறைவனை ஒருத்தி தனக்கே உரியனாகச் செய்துகொள்ளுதல் இயலாத தொன்றாதலின், அவ்வெண்ணத்தை மயக்கம்’ என்றாள். ‘காதல் மிகுதியால் இன்னதோர் எண்ணம் இவட்குத் தோன்றிற்று’ என்பதாம். |