சொல்லகராதிச் சுருக்கம்

1. திருவிசைப்பா

2. கோயில்


13.

கருவளர் மேகத் தகடுதோய் மகுடக்
   கனகமா ளிகைகலந் தெங்கும்
பெருவள முத்தீ நான்மறைத் தொழிலால்
   எழில்மிகு பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் தெய்வப் பதிவிதி நிதியந்
   திரண்டசிற் றம்பலக் கூத்தா!
உருவளர் இன்பச் சிலம்பொலி அலம்பும்
   உன்அடிக் கீழதென் உயிரே.                   (2)
 

13,  கருவளர்-சூல் மிகுந்த. அகடு-வயிற்றின்கண்.  ‘மகுடம்’ என்றது,
சிகரத்தை.     கலந்து-கலக்கப்பட்டு.    பெரும்பற்றப்     புலியூராகிய
‘தெய்வப்பதி’ எனவும், ‘தெய்வப் பதிச்சிற்றம்பலம்’  எனவும்  இயையும்.
திரு-அழகு. விதி நிதியம்-முறைப்படி செய்யும்  வழிபாடாகிய  செல்வம்.
உரு-அழகு,  ‘உருவளர்  சிலம்பு’  என்க.  அன்றி,    உருவளர் அடி’
எனலுமாம்.  ‘நான்மறைத்  தொழில்சால்’ எனவும், ‘தெய்வப் பதி  வதி’
எனவும், பாடம் ஓதுப.  


மேல்