2. சேந்தனார் திருவிசைப்பா
6. திருவாவடுதுறை
63. | வேந்தன் வளைத்தது மேருவில்; அரவுநாண் வெங்கணை செங்கண்மால்; போந்த மதிலணி முப்புரம் பொடியாட வேதப்புர வித்தேர்ச் சாந்தை முதல்அயன் சாரதி; கதிஅருள் என்னுமித் தையலை ஆந்தண் திருவா வடுதுறை யான்செய்கை யார்அறி கிற்பரே. (6) |
63. ‘நாண் அரவு’ எனவும் ‘அருள் கதி’ எனவும் மாறிக்கூட்டுக. போந்த மதில் அணி - வானில் திரிந்த மதில்களைக் கொண்ட.‘ வேதப் புரவித் தேர்ச் சாந்தை முதல் வேந்தன், என முன்னே கூட்டி, ‘முப்புரம் பொடியாட’ என்பதனை அதன்பின் வைத்து உரைக்க. ‘அருள் கதி’ என்றதற்கு, ‘அவனது அருளே எனக்குப் புகல்’ எனப் பொருள் கூறுக. ‘‘தையலை’’ என்றது ‘‘செய்கை’’ என்னும் தொழிற் பெயரோடு முடியும். ஆம் - நீர் ‘அதனால் உண்டாகிய தண்மையை உடைய திருவாவடுதுறை’ என்க. செய்கை - வருந்தச் செய்தலை.‘யார் அறிகிற்பர்’ என்றது, அறிந்து நீக்கவல்லார் யார் என்றதாம். |