3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
11. திருமுகத்தலை
113.
| புழுங்குதீ வினையேன் வினைகெடப் புகுந்து புணர்பொரு ளுணர்வுநூல் வகையால் வழங்குதேன் பொழியும் பவளவாய் முக்கண் வளரொளி மணிநெடுங் குன்றே ! முழங்குதீம் புனல்பாய்ந் திளவரால் உகளும் முகத்தலை யகத்தமர்ந் தடியேன் விழுங்குதீங் கனியாய் இனியஆ னந்த வெள்ளமாய் உள்ளமா யினையே. (2) |
113, புழுங்குதல்-வேதல் ‘‘புழுங்கு’’ என்றது, ‘‘வினையேன்’’ என்பதன் இறுதிநிலையோடு முடியும். ‘‘புழுங்கு தீவினையேள்’’ என்றது, ‘தீவினையால் புழுங்குவேன்’ என்றவாறாம். புகுந்து - எதிர் வந்து. புணர் பொருள் உணர்வு நூல் வகையால்-அடையத்தக்க மெய்ப்பொருளை உணரும் உணர்வைத் தருகின்ற நூன்முறை வாயிலாக வழங்கு தேன்-உன் அடியார்க்கு நீ வழங்குகின்ற திருவருளாகிய தேனை, ‘‘பொழியும்’’ என்றது இறந்தகாலத்தில் நிகழ்காலம். இதனால், இவர்க்கு இறைவன் ஆசிரியனாய் வந்து அருள் புரிந்தமை பெறப்படும். (ஒளிக் குன்று) என இயையும். மணிக் குன்று-மாணிக்க மலை. ‘உள்ளமும்’ என உம்மை விரித்து, ‘முகத்தலை அமர்ந்து, எனதும் உள்ளத்தும் ஆயினை’ என உரைக்க. ஆயினை-பொருந்தினாய். ‘இதற்கு யான் செய்யும் கைம்மாறு என்’ எனக் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க. |