3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
14. திருப்பூவணம்
146.
| கரைகடல் ஒலியின் தமருகத் தரையிற் கையினிற் கட்டிய கயிற்றால் இருதலை ஒருநா இயங்கவந் தொருநாள் இருந்திடாய் எங்கள்கண் முகப்பே விரிதிகழ் விழவின் பின்செல்வோர் பாடல் வேட்கையின் வீழ்ந்தபோ தவிழ்ந்த புரிசடை துகுக்கும் ஆவண வீதிப் பூவணம் கோயில்கொண் டாயே. (3) |
146. கரை-ஒலிக்கின்ற. கடல் ஒலியின்-கடல் ஒலி போன்ற ஒலியினையுடைய. ‘‘தமருகத்து அரையின்’’ என்பது முதல், ‘‘இயங்க’’ என்பதுகாறும் உள்ள பகுதியால் இறைவன் தனது தமருகத்தினின்றும் ஒலியை எழுப்பும் முறை விளக்கப்பட்டது. தமருகம்- உடுக்கை. ‘அதன் அரைக்கும் உனது கைக்குமாகக் கட்டப்பட்டுள்ள கயிற்றினால் அதன் இருபக்கத்தும் ஒருநாவே சென்று தாக்கி ஒலியை எழுப்ப, அந்நிலையோடே எங்கள் கண்களின் முன்னே ஒருநாள் வந்து இருந்தருள்’ என்றவாறு. விரி-விரிவு ; முதனிலைத் தொழிற் பெயர். ‘‘விழவு’’ என்றது, அதிற்கூடும் மக்கட் கூட்டத்தினை. பாடல் பாடுவோர் மக்கட் கூட்டத்தின் நெருக்கத்திடையே செல்லாது பின்பு செல்லுதலின், ‘‘விழவின்பின் செல்வோர் பாடல்’’ என்றார். ‘விழவிற் பின்செல்வோர் பாடல்’ எனப் பாடம் ஓதி விழாவில் ‘நின்பின் செல்வோரது பாடல் ; என்று உரைத்தலும் ஆம். பாடல் வேட்கையின்-பாடல்மேல் எழுந்த வேட்கையினால், ‘வீழ்ந்த புரிசடை, போது அவிழ்ந்த புரிசடை’ என்க. ‘நின்புரிசடை’ என உரைக்க. வீழ்ந்த - அவிழ்ந்த, அடியாரது பாடலை இறைவன் இனிதாகக் கேட்டுத் தலையை அசைத்தலால், கட்டியுள்ள அவனது சடை அவிழ்ந்து வீழ்ந்தது. துகுக்கும்- தூர்க்கின்ற ; நிரம்பச் சொரிகின்ற. ‘‘போது அவிழ்ந்த புரிசடை’’ என்றதனால், சொரியப்படுவன அப்போதுகளே ஆயின. போது-பேரரும்பு ; அவை, கொன்றை, ஆத்தி முதலியவற்றின் அரும்புகளாம். அவிழ்ந்த-மலர்ந்த. ‘விழாக் காலங்களில் இறைவனது சடைக்கண் உள்ள மலர்களே வீழ்ந்து நிரம்பும் பெருமையை உடையன, திருப்பூவணத்தின் கடை வீதிகள்’ என்றவாறு. |