3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
15. திருச்சாட்டியக்குடி
154. | தொழுதுபின் செல்வ தயன்முதற் கூட்டம் ; தொடர்வன மறைகள்நான் ; கெனினும் கழுதுறு கரிகா டுறைவிடம் ; போர்வை, கவந்திகை கரியுரி ; திரிந்தூண் ; தழலுமிழ் அரவம் கோவணம் ; பளிங்கு சபவடம் சாட்டியக் குடியார் இழுதுநெய் சொரிந்தோம் பழல்ஒளி விளக்கேழ் இருக்கையில் இருந்தஈ சனுக்கே. (3) |
154. ‘நான்கும்’ என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. கழுது-பேய். கரி காடு - கரிகின்ற காடு ; சுடுகாடு. கவந்திகை- உணவு. ‘போர்வை கரிஉரி, கவந்திகை திரிந்தூண்’ என நிரல் நிறையாகக் கொள்க. திரிந்து ஊண்- அலைந்து ஏற்கும் உண்டி. தழல் உமிழ்-கண்ணால் நெருப்பைச் சிந்துகின்ற ; என்றது ‘சீற்றத்தையுடைய’ என்றபடி. பளிங்கு-படிகமணி. ‘சாட்டியக்குடியார் ஓம்பு அழல், விளக்கு என்க. இழுது நெய்-வெண்ணெயை அப்பொழுது உருக்கிக்கொண்ட நெய். ‘பணிகேட்டுச் சூழ்பவர் அயன் முதலிய தேவர்களும், அறிய மாட்டாது ஆய்ந்து தொடரும் நூல்கள் வேதங்களும் ஆகிய பெருமைகள் காணப்படினும், அவன் உறைவிடம் சுடுகாடு முதலியவையாய் உள்ளன ; இஃது அறிதற்கரிதாய் இருந்தது’ என்றவாறு, இங்கும், ‘உறைவிடம் கரிகாடு ; கோவணம், அரவம்; சபவடம் பளிங்கு ; விளக்கு அழல்’ என மாற்றுக. ‘‘பளிங்கு’’ என்றது, மாணிக்கம் முதலிய பிற இரத்தினங்களல்லாமையை உட்கொண்டது. |