3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
16. தஞ்சை இராசராசேச்சரம்
166. | எவருமா மறைகள் எவையும்வா னவர்கள் ஈட்டமும் தாட்டிருக் கமலத் தவருமா லவனும் அறிவரும் பெருமை அடல்அழல் உமிழ்தழல் பிழம்பர் உவரிமா கடலின் ஒலிசெய்மா மறுகில் உறுகளிற் றரசின தீட்டம் இவருமால் வரைசெய் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே. (5) |
166. ‘‘எவரும்’’ என்றதற்கு, ‘மக்கள் யாவரும்’ என உரைக்க. தாள் திருக் கமலம்-தண்டினையுடைய அழகிய தாமரை மலர். அதன்கண் இருப்பவர், பிரமதேவர். பிரமனைப் பன்மையாற் கூறியது முடிதேடி வந்த பொழுது, ‘அறிந்து வந்தேன்’ எனப்பொய் கூறிய இழிவை உட்கொண்டு. அறிவரு - அளவறியப்படாத. அளவறியப்படாமையை வெளிப்படுத்தினோர் அயனும், மாலுமாயினும் அறியமாட்டாமை அனைவர்க்கும் பொதுவாதல் பற்றி, அவ்விருவரோடு, ஏனைய பலரையும் உளப்படுத்துக் கூறினார். பெருமை, அடி பாதலத்தைக் கடந்தும், முடி அண்டங்கள் எல்லாவற்றையும் கடந்தும் நின்றமை. ‘பெருமையையுடைய தழல்’ என்க. அடல்-அடுதல் ; வருத்துதல். ‘வருத்துதலையுடைய அழல்’ என்க. அழல்-வெப்பம், பிழம்பர், ‘பிழம்பு’ என்பதன் போலி. பிழம்பு-வடிவம். உவரி-உவர்ப்புடையதாகிய. ‘‘அரசு’’ என்றது பன்மை குறித்து நின்றது. ‘மா மறுகில் உறு களிற்றினது ஈட்டம் மாகடலின் ஒலிசெய்’ என மாற்றி அதனையும். ‘‘இஞ்சி சூழ்’’ என்பதனையும், ‘தஞ்சை’ என்பதனோடு தனித்தனி முடிக்க. இவரும்-உயர்ந்த. ‘‘மால்வரை செய்’’ என்றதில் உள்ள செய், உவம உருபு. ‘இவர்க்குப் பிழம்பர் தழல்’ என முடிக்க. |