சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

16. தஞ்சை இராசராசேச்சரம்


170.

மங்குல்சூழ் போதின் ஒழிவற நிறைந்து
   வஞ்சகர் நெஞ்சகத் தொளிப்பார் ;
அங்கழற் சுடராம் அவர்க்கிள வேனல்
   அலர்கதி ரனையர் ; வா ழியரோ !
பொங்கெழில் திருநீ றழிபொசி வனப்பிற்
   புனல்துளும் பவிர்சடை மொழுப்பர்
எங்களுக் கினியர் இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே.                   (9)
 

170.     மங்குல்    சூழ்    போதின்-மேகத்தால்  மறைக்கப்பட்ட
ஞாயிற்றைப்போல.  ‘பாலின்  நெய்போல’ என்ற உவமை போல, இஃது
இறைவன்   எங்கும்   இருந்தும்   விளங்காது  நிற்றற்குக்  கூறப்பட்ட
உவமை.    ‘‘ஒழிவற    நிறைந்து’’    என்பதை   முதலிற்   கூட்டுக.
அங்கு-அவ்விடத்தில்;  நெஞ்சில்,  அழல்  சுடராம் அவர்க்கு-எரிகின்ற
விளக்குப்போல  ஒளியுடையராய்  இருக்கின்ற   அன்பர்க்கு.  வேனல்
அலர்   கதிர்  அனையர்-வேனிற்  காலத்து   விரிந்து  விளங்குகின்ற
ஞாயிறு   போலப்   பேரொளி   வீசிநிற்பவர்.   திருநீறு  அழிபொசி
வனப்பின்-திருநீறு  அழிந்து  குழைகின்ற   அழகோடு. புனல் துளும்பு
சடை   மொழுப்பர்-நீர்   ததும்புகின்ற    சடைமுடியை   உடையவர்.
சடையிலுள்ள   நீர்   துளும்புதலால்   திருமேனியிற்  பூசியுள்ள  நீறு
அழிந்து குழைகின்ற அழகையுடையர்’   என்பதனை இவ்வாறு கூறினார்.
‘‘வாழியர்’’  என்றதனை வியங்கோளாகவும்,  ஓகாரத்தைச் சிறப்பாகவும்
வைத்து     ‘‘வாழியரோ’’     என்றதனை    இறுதியிற்     கூட்டி,
‘ஒளிப்பவரும்,      அனையவரும்,      இனியவரும்       ஆகிய
இவர்பொருட்டு       (இவரை   வணங்குதற்     பொருட்டு)   யான்
வாழ்வேனாக’  எனக்  காதலுடையாள் கூற்றாக  உரைக்க. இவ்வாறன்றி,
‘வாழி,    அரோ   என்பன   அசைநிலைகள்    எனக்   கொள்ளின்,
இராசராசேச்சரத்து இவரே’ என்பது பாடமாதல் வேண்டும்.  


மேல்