3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
17. திருவிடைமருதூர்
175. | பனிபடு மதியம் பயில்கொழுந் தன்ன பல்லவம் வல்லியென் றிங்ஙன் வினைபடு கனகம் போலயா வையுமாய் வீங்குல கொழிவற நிறைந்து துனிபடு கலவி மலைமக ளுடனாய்த் தூங்கிருள் நடுநல்யா மத்தென் மனனிடை யணுகி நுணுகியுள் கலந்தோன் மருவிடந் திருவிடை மருதே. (3) |
175. பனி படு மதி-குளிர்ச்சி பொருந்திய சந்திரன் ; என்றது பிறையை. கொழுந்து-குருத்து. அன்ன பல்லவம்- அவற்றோடொத்த தளிர். வல்லி-கொடி. என்று இங்ஙன் வினைபடு கனகம்போல யாவையுமாய்-ஆகிய இன்னோரன்ன பொருள் வடிவாகச் செய்யப்படுகின்ற பொன்போல எல்லாப் பொருள்களுமாய் என்றது, ‘பொன் ஒன்றே பல பொருள்களாய் நிற்றல்போலத் தான் ஒருவனே எல்லாப் பொருளுமாய் நிற்கின்றான்’ என்றவாறு. இது பரிணாமம் கூறியதன்று ; கலப்புப் பற்றியே கூறியது. தூங்கு இருள்-மிக்க இருள். ‘‘நடுநல்யாமத்து’’ எனக் களவிற் கலக்கப்பட்ட தலைவியது கூற்றுப் போலக் கூறினார். ‘யாவரும் அறியாதவாறும், யானும் அறியாதவாறும் என் மனத்திடை அணுகினான்’ என்பது உண்மைப் பொருள். |
|