சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

17. திருவிடைமருதூர்


180.

வையவாம் பெற்றம் பெற்றம்ஏ றுடையார்
   மாதவர் காதல்வைத் தென்னை
வெய்யவாஞ் செந்தீப் பட்டஇட் டிகைபோல்
   விழுமியோன் முன்புபின் பென்கோ
நொய்யவா றென்ன வந்துள்வீற் றிருந்த
   நூறுநூ றாயிர கோடி
மையவாங் கண்டத் தண்டவா னவர்கோன்
   மருவிடந் திருவிடை மருதே.                   (8)
 

180,     ‘‘முன்பு பின்பு   என்கோ’’  என்பதனை முதலில் வைத்து,
’முன்பென்பேனா  பின்பென்பேனா’    எனப்  பொருள் கூறி, அதனை,
‘‘வந்து  உள்வீற்றிருந்ததனை’’  உட்கொண்டு   கூறியவாறாக  உரைக்க.
‘உள்வீற்றிருந்தது   ஒருகாலத்தன்று;   என்றுமே    யாம்’  என்றவாறு.
இதன்பின்,  விழுமியோன்  வை  அவாம்  பெற்றம்   பெற்று என்னை,
வெய்யவாம்  செந்தீப்பட்ட இட்டிகைபோல் அம்   ஏறுடையார் மாதவர்
காதல்     வைத்து’       எனக்       கொண்டு     கூட்டியுரைக்க.
விழுமியோன்-யாவரினும்   மேலானவன்;    இதுவும்   இறைவனையே
குறித்தது,  வை  அவாம்  பெற்றம் பெற்று-வைக்கோலை விரும்புகின்ற
எருதினை   ஊர்தியாகக்  கொண்டு.   இட்டிகை-செங்கல்.  ‘மண்ணால்
ஆக்கப்படுகின்ற   இது,   செந்தீயில்    வெந்தபின்   உரம்   பெற்று
நிற்றல்போல்,   பாசத்தால்   கட்டுண்டு   எளியனாய்  நின்ற  யானும்
ஞானத்தால்  திண்ணியனாகும்படி’  என்றவாறாம்.   ‘போல ஆகும்படி’
என்னும்    பொருட்டாகிய,   ‘போல’   என்பதன்    ஈற்று   அகரம்
தொகுத்தலாயிற்று.  அம்  ஏறுடையார் மாதவர் காதல்  வைத்து-அழகு
மிக்கோராகிய   அடியாரது   அன்பிலே    நிற்கச்செய்து.  அழகு  -
அருட்பொலிவு  ;  அடியவர்க்கு  ஏவல் செய்து  நிற்பின், அஞ்ஞானம்
நுழைதற்கு  வாயில்  இல்லாமை  அறிக.  நொய்ய   ஆறென்ன-எளிய
பொருள்போல.  ‘‘ஆறு’’  என்றது,  அதனாற்   கிடைக்கும் பொருளை
யுணர்த்திநின்றது.  ‘வீற்றிருந்த  கோன்’  என   இயையும். மை-மேகம்.
இங்கு,   ‘அவாம்’   என்பது   உவம  உருபாய்   நின்றது.  ‘விழைய’
என்பதோர்   உவம   உருபும்   உளதாதல்  அறிக.   ருமை  மிகுதி
உணர்த்தற்கு. ‘நூறுநூறாயிர கோடி மேகம் போலும்’ என்றார்.  


மேல்