சொல்லகராதிச் சுருக்கம்

7. திருவாலியமுதனார் திருவிசைப்பா

23. கோயில்


229.

அருள்செய் தாடுநல் லம்பலக் கூத்தனே!
   அணிதில்லை நகராளீ!
மருள்செய் தென்றனை வனமுலை பொன்பயப்
   பிப்பது வழக்காமோ ?
திரளும் நீண்மணிக் கங்கையைத் திருச்சடைச்
   சேர்த்திஉச் செய்யாளுக்
குருவம் பாகமும் ஈந்துநல் அந்தியை
   ஒண்ணுதல் வைத்தோனே.                    (4)
 


229.    அருள்   செய்து  -    உயிர்கள்மேல்    அருள்பண்ணி;
இரண்டாமடியை  இறுதிக்கண்  கூட்டியுரைக்க மருள்-மயக்கம்; மையல்.
‘என்றனை       மருள்செய்து’     என       மாற்றுக.     பொன்
பயப்பிப்பது   -     பொன்போலப்         பசக்கச்      செய்வது.
வழக்காமோ-முறையாகுமோ.     நீள்      மணி-மிக்க     ரத்தினம்.
செய்யாள்-சிறந்தவள்;       உமையம்மை.     உருவம்     பாகமும்
தந்து-உருவத்தைப்    பங்காகவும்    கொடுத்து.   ‘தீயை’    என்பது,
‘தியை’,எனக்  குறுகி  நின்றது.  தீயை நெற்றிக் கண்ணில் வைத்தோன்.
என்றது,  ‘காமனை எரித்தோன்’  என்னும்  குறிப்பினது. ‘கங்கையையும்,
உமையையும்   கலந்தாற்போல    என்னைக்  கலத்தலாவது  செய்தல்
வேண்டும்;  அல்லது என்னை  வருத்துகின்ற காமனையாவது எரித்தல்
வேண்டும்;  இவற்றுள்  ஒன்றேனும்  செய்யாது என்னைப் பசப்பிப்பது
முறையோ’  என்பாள்,  ‘கங்கையைச்  சடைச்சேர்த்திச் செய்யாளுக்குப்
பாகமும் தந்து தீயை நுதல் வைத்தோனே’ என்றாள். 


மேல்