8. புருடோத்தம நம்பி திருவிசைப்பா
26. கோயில்
265. | எங்களை ஆளுடை ஈசனேயோ ! இளமுலை முகம்நெக முயங்கி நின்பொற் பங்கயம் புரைமுக நோக்கி நோக்கிப் பனிமதி நிலவதென் மேற்படரச் செங்கயல் புரைகண்ணி மார்கள் முன்னே திருச்சிற்றம் பலமுட னேபு குந்து அங்குன பணிபல செய்து நாளும் அருள்பெறின் அகலிடத் திருக்க லாமே. (9) |
265. நெக - குழைய. முயங்கி-தழுவி. பொற் பங்கயம், இல்பொருள் உவமை. நிலவு - மதியினது ஒளி. அது, பகுதிப் பொருள் விகுதி. ‘‘செங்கயல் புரைகண்ணிமார்கள் முன்னே’’ என்றது, ‘ஏனைய மகளிரினும் முற்பட்டு’ என்றவாறு. ‘முன்னே புகுந்து’ என இயையும். உடனே - விரைவாக. ‘நாளும் செய்து’ என முன்னே சென்று இயையும். அகலிடம், பூமி, இருக்கலாம் - உயிர் வாழ்தல் கூடும். ‘ஈசனேயோ, முன்னே’ உடனே புகுந்து, முயங்கி, நோக்கிநோக்கி நாளும் பணி பல செய்து அருள்பெறின் இருக்கலாம்; அல்லது கூடாது’ எனத் தனது ஆற்றாமை மிகுதி கூறினாள். இதனால் இவ்வாசிரியரது பேரன்பு அறியப்படும். ‘‘நிலவு என்மேல் படரப் பணி பல செய்து’’ என்றதனால், ‘அணுக்கத் தொண்டுகள் பல செய்து’ என்றதாயிற்று. |