சொல்லகராதிச் சுருக்கம்

9. சேதிராயர் திருவிசைப்பா

28. கோயில்


279.

சேலு லாம்வயல் தில்லையு ளீர்உமைச்
சால நாள்அயற் சார்வதி னால்இவள்
வேலை யார்விட முண்டுகந் தீரென்று
மால தாகுமென் வாணுதலே.                       (1)
 


279.     அயல்   சார்வது-பக்கத்தில்   அணுகி   நிற்றல்.   இது
நாள்தோறுமாம்.    வேலை    ஆர்-கடலில்   நிறைந்து  தோன்றிய.
உகந்தீர்-அதனையே    அமுதமாகக்    கொண்டீர்.    என்று-என்று
இடையறாது   கூறி.   மால்   ஆகும்-பித்துடையவள்   ஆகின்றாள்.
‘அவளுக்கு   அருளல்   வேண்டும்’  என்பது  குறிப்பெச்சம்.  அது,
பகுதிப்பொருள்  விகுதி.  வாள்  நுதல்-ஒளியையுடைய நெற்றி; இஃது,
ஆகுபெயராய். ‘ஒளி பொருந்திய நெற்றியை உடைய என்மகள்’ எனப்
பொருள்தந்தது.   ‘‘அயற்   சார்வதினால்  மாலதாகும்’’  என்றதனால்,
இறைவரது வசிகரம் விளங்கும். ‘‘விடம் உண்டு உகந்தீர்’’ என்றதனால்,
‘அதனினும் நான் கொடியளோ’ என்பது குறித்தாள்.


மேல்