சேந்தனார் திருப்பல்லாண்டு
29. கோயில்
291. | நிட்டையி லாஉடல் நீத்தென்னை ஆண்ட நிகரிலா வண்ணங்களும் சிட்டன் சிவனடி யாரைச்சீ ராட்டுந் திறங்களு மேசிந்தித் தட்டமூர்த் திக்கென் அகம்நெக ஊறும் அமிர்தினுக் காலநிழற் பட்டனுக் கென்னைத்தன் பாற்படுத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. (3) |
291. நிட்டை-உறைத்து நிற்றல்; அசையாது நிற்றல். இஃது இறைவனிடத்து நிற்றலேயாம். நிற்பது உயிரேயாயினும், அதற்குத் துணையாவது உடலாகலின், அதனை உடன் மேல் ஏற்றி, துணைசெய்யாத உடலை, ‘‘நிட்டை இலா உடல்’’ என்றார். ‘‘நீத்து’’ என்றது, ‘மாற்றி’ என்றபடி. அஃதாவது, ‘நிட்டைக்குத் துணை செய்வதாக ஆக்கி’ என்றதாம். ‘‘என்னை ஆண்ட’’ எனத் தமக்கு அருள்செய்ததையே கூறினார், தம் கீழ்மை காரணமாகத் தமக்கு அருள்புரிந்ததே பெரும் புகழாவது’ என்பது பற்றி. ‘சிட்டனாகிய சிவன்’ என உரைத்து’ ‘தன்னடியாரை எனச் சொல்லெச்சம் வருவிக்க. ‘‘திறங்களுமே’’ என்ற ஏகாரம் உலகியலைச் சிந்தித்தலை விலக்கிற்று. |
‘‘அட்டமூர்த்திக்கு ‘‘முதலிய நான்கும், ‘அவனுக்கு’ என்னும் சுட்டுப்பெயரளவாய் நின்றன. அகம் நெக-மனம் உருகும்படி. ஊறும்-சுரக்கின்ற. பட்டன்-ஆசிரியன். |