28. தேவியும் வேடிச்சி கோலங்கொண்டு உடன் சென்றமையின், ‘அவள் முன்னே’ என்றார், ‘‘மகேந்திரம்’’ ` என்பது இங்கு கயிலாய மலையைக் குறித்து நிற்றல் நோக்கத்தக்கது. மேலவற்றோடு ஒப்ப வருதற்பொருட்டு, இங்கு, கயிலையை ‘மகேந்திரம்’ எனப் பொதுவகையாற் கூறிப்போந்தார் எனினுமாம். ‘‘கண்டார்’‘ என்றது அன்பரை; என்னை, இறைவனது எளிவந்த செயலை நோக்கிக் கவலுதற்குரியார் அவரேயாகலின், ‘‘கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக் கண்டால் அடியார் கவலாரே? ’’ (திருமுறை- 7, 4 1.1.) என்பது முதலிய திருமொழிகளைக் காண்க. கவல -வருந்த. வில்லாடுதல்-விற்றொழில் புரிதல். வேடர் நாய்-வேட்டைக்கு உரியது. கடி நாய்-விரைவுடைய நாய். கை வளைந்தாய்-பல பக்கங்களிலும் சுற்றினாய். ‘வில்லாடிக் கைவளைந்தாய்’ என்று இயைத்து, ‘விற்றொழில் செய்தலால் கைகள் செயற்படப் பெற்றவனே’ என்று உரைப்பினும் ஆம். ஆய-தக்கன் வேள்விக்குச்சென்ற. தக்கன் வேள்வியில் பல் உகுக்கப்பட்டவன். ‘பூடா’ என்னும் பகலவனும், கண் பறிக்கப்பட்டவன். ‘பகன்’ என்னும் பகலவனும் ஆதலின், ‘பகலோன்’ என்பதைத் தனித்தனி கூட்டுக. இத்திருப்பாட்டின் மூன்றாம் அடியுள், ‘பகலோன் அனல் பகற்பற்பசுங்கண்’ என்பது பாடம் ஆகாமை அறிந்து கொள்க. |