3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
9. கோயில்
98. | மெய்யரே மெய்யர்க் ; கிடுதிரு வான விளக்கரே ; எழுதுகோல் வளையாள் மையரே ; வையம் பலிதிரிந் துறையும் மயானரே ; உளங்கலந் திருந்தும் பொய்யரே பொய்யர்க் ; கடுத்தவான் பளிங்கின் பொருள்வழி இருள்கிழித் தெழுந்த ஐயரே யாகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே. (8) |
98. மெய்யர்க்கு-மெய்ந்நெறியில் நிற்பவர்கட்கு, ‘இடுவிளக்கர்’ என இயையும்; ‘ஏற்றப்பட்ட விளக்குப்போல்பவர்’ என்பது பொருள்; அஃதாவது, ‘இருளை (அறியாமையை) நீக்கி ஒளியை (அறிவை) த் தருபவர் என்பதாம். திருவான-அழகான. எழுது கோல் வளையாள்-எழுதப்பட்டதுபோலும் வரிகளை யுடைய திரண்ட வளைகளை யணிந்த உமாதேவி. மையர்-அவளது கரிய நிறத்தை ஒருபால் உடையவர். ‘கோல்வளையை ஆண்மையர் (ஆளுந் தன்மையை உடையவர்), என்றும், ‘மையலர் என்பது இடைக்குறைந்து நின்றது’ என்றும் உரைப்ப. ‘பொய்யர்க்குப் பொய்யரே’ எனக்கூட்டுக; ‘எல்லார் உளத்திலும் இருந்தும், பொய்யருக்குத் தோன்றாதவர்’ என்றபடி. ‘‘பளிங்கின் பொருள்’’ என்ற இன், அல்வழிக்கண் வந்த சாரியை, ‘பளிங்குபோலும் பொருள்’ என்றவாறு, பளிங்கு போலும் பொருள்-மாசு தீர்ந்த உயிர்கள் (முத்தான்மாக்கள்) அவற்றின்வழி இருள்கிழித்தெழுதலாவது, சீவன்முத்தர்களது சொல்லாலும், செயலாலும் பக்குவர்களுக்கு மெய்யுணர்வை உண்டாக்குதல், ஐயர்-தலைவர். |