3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
11. திருமுகத்தலை
112. | புவனநா யகனே ! அகவுயிர்க் கமுதே ! பூரணா ! ஆரணம் பொழியும் பவளவாய் மணியே ! பணிசெய்வார்க் கிரங்கும் பசுபதீ ! பன்னகா பரணா ! அவனிஞா யிறுபோன் றருள்புரிந் தடியேன் அகத்திலும் முகத்தலை மூதூர்த் தவளமா மணிப்பூங் கோயிலும் அமர்ந்தாய் தனியனேன் தனிமைநீங் குதற்கே. (1) |
112. புவனம்-உலகம் ; இவ்வஃறிணை இயற்பெயர் பன்மைப் பொருட்டாய், ‘எல்லா உலகங்கட்கும், எனப் பொருள் தந்தது. இவ்வாறு வருவதனை, ‘சாதியொருமை’ என்ப. அகம்-இடம்; அக உயிர் -உன்னை அடைந்த உயிர்கள்; முத்தான்மாக்கள், ‘அவனிக்கு’ என உருபு விரித்து, உலகிற்கு இருளை நீக்கி ஒளியைத் தரும் ஞாயிறுபோன்று மருளை நீக்கி அருளை வழங்கி, என உரைக்க. பசுபதி-உயிர்கட்குத் தலைவன். பன்னக ஆபரணன்- பாம்பாகிய அணிகளை யுடையவன ; தனியனேன் - துணை இல்லாதேன். தனிமை நீங்குதற்கு- அந்நிலை நீங்குமாறு ; என்றது, யான் துணை பெற்று உய்யும்படி’ என்றவாறு. |